மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
மட்டக்களப்பில் நேற்றிரவு (14.05.2026) 7 மணியளவில் 16 வயது சிறுமி மயக்கமடையச் செய்து கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற சிறுமியொருவரே மயக்க மருந்து கொடுக்கப்பட்டு முச்சக்கரவண்டியொன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தப்பியோடிய சந்தேகநபர்
இதனையடுத்து பெற்றோர் குறித்த முச்சக்கரவண்டியை வீதியை வைத்து மடக்கிப் பிடித்த நிலையில், சந்தேகநபர் வாகனத்தை விட்டு விட்டு தப்பியோடியுள்ளார். தொடர்ந்து மயக்கமடைந்த சிறுமி மட்டு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி கைவிடப்பட்டிருந்த இடத்துக்கு, மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த மற்றைய சந்தேகநபர், முச்சக்கரவண்டி உரிமையாளர் தனது நண்பன் எனவும், முச்சக்கரவண்டியை எடுத்து கொண்டு போகப் போக வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமியின் தந்தை பிரச்சினை குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த போது, குறித்த இளைஞன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு கூடியிருந்த பொது மக்கள் அந்த இளைஞனை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணை முன்னெடுப்பு
இதனை தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கரவண்டி மீட்கப்பட்டதுடன் தப்பி ஓடி தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய திருமணம் முடித்த நபர் எனவும், கைதான மற்றைய நபரும் இருதயபுரத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களை விசாரணையின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam