நல்லூர் திருவிழாவில் நகை திருட முயன்ற யுவதி: மடக்கி பிடித்த சாரணர்கள்
நல்லூர் தேர் திருவிழாவின் போது நகைகளை திருட முயன்ற இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் இருந்த சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று(21) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நல்லூர் ஆலய தேர் திருவிழாவான நேற்றையதினம் இளம் யுவதி ஒருவர் பக்தர்களுக்கு இடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய வேளை , அதனை அப்பகுதியில் இருந்த சாரணர்கள் அவதானித்து யுவதியை தொடர்ந்து அவதானித்துள்ளனர்.
கைது
இதன் போது குறித்த யுவதி ஒரு பெண்ணிடம் சங்கிலி அறுக்க முற்பட்ட வேளை சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
பின்னர் அப்பகுதியில் இருந்த பொலிஸாரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்ட நிலையில் , பொலிஸார் யுவதியை அழைத்து சென்று சோதனை செய்த போது அவரது உடைமையில் இருந்து மூன்று தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனை அடுத்து யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , யுவதி கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் , அவருடன் மேலும் சில நபர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
விசாரணை
அதன் அடிப்படையில் யுவதியுடன் வந்த ஏனையவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் யுவதியின் நடவடிக்கைகளை அவதானித்து , யுவதியை கையும் களவுமாக பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கும் பொலிஸார் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
அதேவேளை தேர் திருவிழாவின் போது , தமது தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக 08 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




