இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட ஜேர்மன் பெண் தொடர்பில் வெளியான தகவல்
கேகாலையில் வதிவிட விசா பெற்று வாழ்ந்து வந்த ஜேர்மன் நாட்டு பெண் ஒருவர் கடந்த 14ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
ஹரிவடுன்ன, அம்பஹமுலஹேன பகுதியில் வசித்து வந்த 65 வயதான சபின் மெத்தி என்ற பெண் ஒருவரின் சடலமே அறையின் கட்டிலில் இருந்து கேகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டது. எனினும் இந்த மரணத்திற்கான காரணம் தற்கொலை என பொலிஸ் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி தற்கொலை செய்துக் கொண்ட குறித்த பெண்ணின் சடலம் 15ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெண் 2013ஆம் ஆண்டு இடைக்கிடையே இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார். பின்னர் இலங்கையில் வதிவிட விசா பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.
இலங்கையில் உள்ள தெரு நாய்களை பராமரிக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் மாத்திரைகள் சிலவற்றை உட்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் உயிரிழக்கும் போது அவரிடம் 12 நாய்கள் காண்பட்டுள்ளன. இந்த நாய்களை பாதுகாப்பதற்கு ஒருவரும் இல்லை என்பதனால் அவற்றை கொன்று விடுமாறு உயிரிழப்பதற்கு முன்னர் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவர் தற்கொலை செய்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.