ஜேர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்
ஜேர்மனியின் பாதுகாப்புத்துறை அமைச்சரான கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் நேற்று (16.01.2023) பதவி விலகியுள்ளார்.
உக்ரைன், ரஷ்யா இடையில் இடம்பெற்று வரும் போரில் அமெரிக்கா, ஜேர்மனி போன்ற பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு அதிகளவில் இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.
இதற்கிடையே, ஜேர்மனி இராணுவத்தின் பெண் அமைச்சராக கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் உக்ரைன் இராணுவ வீரர்களுக்கு 5000 ஹெல்மெட்டுகளை வழங்குவதாக அண்மையில் அறிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய போர்
ரஷ்ய படைகளை எதிர்த்து பேரிடுவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா பேன்று பல நாடுகள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வரும் நிலையில், உக்ரைன் வீரர்களுக்கு ஹெல்மெட் வழங்கும் ஜேர்மனி இராணுவ அமைச்சரின் இந்த அறிவிப்பு கேலிக்குள்ளாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பலரும் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட்டை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அண்மையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் தனது மகனை இராணுவ ஹெலிகொப்டரில் அழைத்துச் சென்றமையும் விமர்சனத்துக்குள்ளானது.
பதவி விலகல் கடிதம்
இந்நிலையில், ஜேர்மனியின் ஆயுத படைகளை மேம்படுத்த தவறிவிட்டதாக கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இவ்வாறான சூழலிலேயே, கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் இராணுவ அமைச்சர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் ஒலாப் ஸ்கோல்சிடம் வழங்கியதாகவும், அவர் அதை ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.