முள்ளிவாய்க்கால் இன அழிப்பு: பிரித்தானிய தமிழர் பேரவையின் நினைவுகூரல் நிகழ்வு
13ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் நிகழ்வு அண்மையில் மத்திய லண்டன் ட்ரபால்கர் சதுக்கத்தில் (Trafalgar square) பல்லின மக்கள் பார்வையிடக் கூடிய ஏற்பாடுகளுடன் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் பங்கு பற்றியிருந்த இந்த நிகழ்வில், பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக உரை நிகழ்த்திய பொது செயலாளர் ரவி குமார்,
இலங்கையில் இடம் பெற்று வரும் அவல நிலைமைக்கு இலங்கை ஆட்சியாளர்கள் மாத்திரமல்லாது பௌத்த சிங்களவாதத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்து கொண்டிருக்கும் மத பீடங்கள், அரசியல் விற்பன்னர்கள், வெகுசனத் தொடர்பு ஊடகங்கள், அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருடன் மெத்தனமான அணுகுமுறையைக் கடைப் பிடித்த சர்வதேச நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடரும் வன்முறை சுழற்சிக்கான (Cycles of Violence) காரணங்கள் கண்டறியப்பட வேண்டுமாயின் சர்வதேச குற்றவியல் நீதி விசாரனைப் பொறிமுறை உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
சர்வதேச உத்தரவாதத்துடனும் தமிழர்களுக்கான நீண்டகால அரசியல் தீர்வுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மற்றும் இலங்கை தேசம் கட்டவிழ்த்து விட்ட நீண்ட கால போரினால் சிதைக்கப்பட்ட தமிழர் தேசத்தில் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள் குடியேற்றம் என்பவற்றுக்கான இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு
2009ம் ஆண்டில் இருந்து சர்வதேச நாடுகளுடன் பல தளங்களில் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு நோக்கி செயற்பட்டுவரும் பிரித்தானிய தமிழர் பேரவை, இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் முடிவுகள் அமைவதற்கு ஏதுவாக தமது செயற்பாடுகளை விரிவுபடுத்தியிருந்தது.
குறிப்பாக இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை தீர்மானத்துக்கு முக்கிய காரணமாக, பிரித்தானிய தமிழர் பேரவை 2010ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட (Are They Alive?) போன்ற முன்னெடுப்புகள் முக்கிய பங்கு வகித்திருந்தது.
முள்ளிவாய்க்கால் என்பது தமிழினம் மட்டுமே நினைவு கூரும் நாளாக அனுஷ்டிக்காமல், ஸ்ரெப்ரெனிக்கா என்றதும் அங்கே இடம்பெற்ற இன அழிப்பு என்பதனை உலக மக்கள் அறிய முற்பட்டது போன்று முள்ளிவாய்க்கால் அமைவிடம் மற்றும் அங்கே நடந்த படுகொலைகள் உட்பட தமிழின அழிப்பின் வரலாற்றினை உலக மக்களுக்கு அறிவூட்டும் ஒரு தொலைநோக்கோடு பிரித்தானிய தமிழர் பேரவை திட்டங்களை வகுத்து செயல்படுத்த தொடங்கியது.
படுகொலை செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் பல கொடூர கணங்களை தாங்கி நிற்கும் எமது உறவுகளுக்கான நீதி வேண்டி எமக்கான புதிய புதிய அரசியல் உத்திகளையும் மற்றும் செயற்பாடுகளையும் விரிவுபடுத்தி சர்வதேசத்துடன் எமது கரங்களை பலப்படுத்தி எமக்கான விடுதலைக்கான பயணத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை எம் உறவுகளின் பேராதரவை வேண்டி நிற்கின்றது”என தெரிவித்துள்ளார்.