தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளானார்கள் – அருட் தந்தை ஜீவந்த பீரிஸ்
இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனவழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என கத்தோலிக்க அருட்தந்தை ஜீவந்த பிரிஸ் மதெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிங்கள அரசாங்கங்களினால் தமிழ் இனவழிப்பு நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் தாரகி சிவராம் கொலை தொடங்கி தீபச்செல்வனின் நூல்கள் சுங்கத்திணைக்களத்தில் முடக்கப்பட்டமை வரையில் அனைத்தையுமே இனவழிப்பு நடவடிக்கைகளாக கருத வேண்டும் என தெரிவித்துள்ளார்.

1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டத்திற்கு எதிராக வடக்கில் இருந்து காலி முகத்திடலில் போராட்டம் நடத்த வந்த தமிழர்கள் கொடூரமாக அடித்து துரத்தப்பட்ட வரலாறு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட அடிப்படையில் தமிழ் மக்கள் இனரீதியாக அழிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
'அரகலய' போராட்டத்தின் முக்கிய முகமான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், அண்மையில் ஆற்றிய உரை ஒன்றின் காரணமாகக் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும், சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்து அவர் விரிவான விளக்கங்களை வழங்கியுள்ளார்.
மே 16 ஆம் திகதி தான் ஆற்றிய உரையின் மிகச்சிறிய பகுதியை மட்டும் வெட்டி எடுத்து, தான் ஒட்டுமொத்த சிங்கள மக்களுக்கும் எதிராகப் பேசியது போன்ற ஒரு பிம்பத்தை ஒரு குழுவினர் உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
உண்மையை எதிர்கொள்ள முடியாதவர்களே இவ்வாறான பதற்றத்தை உருவாக்குவதாகவும், இது தனது குரலை ஒடுக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி என்றும் அவர் சாடியுள்ளார்.
தான் இனப்படுகொலை (Genocide) என்று குறிப்பிட்டது உணர்ச்சிவசப்பட்ட விடயம் அல்ல எனவும், அது பல சர்வதேச மற்றும் உள்ளூர் ஆவணங்களில் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று எனவும் அவர் விளக்கியுள்ளார்.
அவர் தனது கூற்றுக்கு ஆதாரமாகப் பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டினார்: 2013 ஆம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற 'நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில்' சர்வதேச கல்வியியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
2015 பெப்ரவரி 10 ஆம் திகதி வட மாகாண சபை, 1948 முதல் தமிழ் மக்களுக்கு எதிராக அமைப்பு ரீதியான இனப்படுகொலை' நடைபெற்று வருவதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
2022 மே 16 அன்று வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த நான்கு ஆயர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், தமிழ் மக்கள் இன்றும் ஒரு இனப்படுகொலை போன்ற ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இனப்படுகொலை என்பது ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளத்தை அழிக்க முயற்சிப்பதும், அவர்களை உடல் மற்றும் உளரீதியாக ஒடுக்குவதும் ஆகும் என்று அவர் சர்வதேச சட்டங்களை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார்.
இந்த ஒடுக்குமுறைகள் சிங்கள மக்களால் செய்யப்பட்டவை அல்ல, மாறாக 1948 முதல் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தங்களது அதிகாரத்தைத் தக்கவைக்கச் சிங்கள தேசியவாதத்தைப் பயன்படுத்திக் கொண்டன என்று அவர் கூறியுள்ளார்.
1956 இல் காலி முகத்திடலில் அஹிம்சை முறையில் போராடிய தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, 1983 கறுப்பு ஜூலை, யாழ் நூலக எரிப்பு மற்றும் தர்மரத்னம் சிவராம் (தராக்கி) உள்ளிட்டோரின் படுகொலைகள் இந்த 'நிழல் அரசாங்கத்தின்' ஒரு பகுதியே என அவர் சாடியுள்ளார்.
கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம் தனது கருத்திலிருந்து விலகி நிற்பது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், தான் திருச்சபையின் உத்தியோகபூர்வ பேச்சாளராகப் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதே ஒரு மதத் தலைவரின் கடமை. நான் ஒரு குடிமகனாகவும், பாதிக்கப்பட்டவர்களின் வலியுணர்ந்த ஒருவனாகவும் பேசுகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உண்மையான அமைதி ஏற்பட வேண்டுமானால், கடந்த காலத்தில் நடந்த கசப்பான உண்மைகளை ஒப்புக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் மாறுநிலை நீதிப்பொறிமுறைமை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்,.
தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா முன்னெடுத்த 'உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' போன்ற ஒரு பொறிமுறை இலங்கைக்குத் தேவை என அவர் சுட்டிக்காட்டினார்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும், சிறைக்குச் செல்ல நேரிட்டாலும் உண்மைக்காகக் குரல் கொடுப்பதைத் தான் நிறுத்தப் போவதில்லை என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
தம்மை கொலை செய்தாலும், இந்த உண்மைகளை மறைக்க முடியாது என அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.