சாதாரணதர பரீட்சையில் மாணவர்கள் செய்த மோசடி அம்பலம்! எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை
கல்விப் பொதுத் தராதரப் சாதாரணதரப் பரீட்சையின் மூன்று நிலையங்களில் மூன்று மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்போது பிபில வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தி ஒருவர் கணித வினாத்தாளை ஆசிரியை ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசியில் அனுப்பி பதில்களை வாட்ஸ்அப் ஊடாக பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை
மேலும், ஹெனேகம மகா வித்தியாலயத்தின் பரீட்சை நிலையத்தில் இருவர் கையடக்கத் தொலைபேசி மூலம் கணித வினாத்தாளை ஆசிரியர்களுக்கு தனித்தனியாக அனுப்பி விடைகளைப் பெற்றுக் கொண்ட சம்பவத்தை பார்வையாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
சீதுவ த்விஸ்மர வித்தியாலய பரீட்சை நிலையத்தில் ஐந்து பரீட்சார்த்திகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கணித வினாத்தாளை ஆசிரியர்களுக்கு அனுப்பி விடைகளைப் பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுமெனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |