அபயராம விகாரையில் கூடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ள ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகள்
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் 10 கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பௌத்த பிக்குமார் சிலர் இணைந்து கொழும்பு நாராஹேன்பிட்டியில் உள்ள அபயராம விகாரையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர், எதிர்கால பயணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியுள்ளார்.
மக்களின் துன்ப துயரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இந்த விடயங்கள் தொடர்பான எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.
நிர்வாகம் செய்ய முடியாத திறமையற்ற அதிகாரிகளை அரசாங்கம் நியமித்துள்ளது. சுகாதார அமைச்சின் நிர்வாக சீர்குலைந்துள்ளது எனவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை வாழ்க்கை செலவு அதிகரிப்பு, காடுகள் அழிக்கப்படுவது பற்றியும் கலந்துரையாடியதாகவும் காடு அழிப்பை தடுக்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டியதாகவும் ஓமார கஸ்ஸப்ப தேரர் கூறியுள்ளார்.
சில அதிகாரிகள் சம்பந்தமாக பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதனை திருத்திக்கொள்ள வேண்டும். அரசாங்கம் அதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ச கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், நாராஹேன்பிட்டி அபயராம விகாரையிலேயே தனது அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்து முன்னெடுத்து வந்தார்.
முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.