இலங்கைக்கு நிதியை வழங்கமுன் விதிக்கப்பட்டிருக்க வேண்டிய நிபந்தனை! கரி ஆனந்தசங்கரி
சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு நிதியை வழங்குவதற்கு முன் தமிழ் சிறுபான்மையினருக்கு கூடுதல் சுயாட்சி என்ற விடயத்தை நிபந்தனையாக விதித்திருக்க வேண்டும் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தோல்வியுற்ற நாடு
அவர் மேலும் தெரிவிக்கையில், எவ்விதமான அளவீட்டின் படியும், இலங்கை தோல்வியுற்ற மற்றும் வங்குரோத்து நாடாகும். அத்துடன் நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யும் அரசியல் மற்றும் பொருளாதாரத் தலைமை இல்லாத நாடு.
எனவே சர்வதேச நாணயநிதியம், இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களின் மொத்த மற்றும் கடுமையான மீறல்களில் கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் தமிழ் பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்த வேண்டும் கோரியுள்ளார்.
கரி ஆனந்த சங்கரியின் கருத்துக்கள்
இதேவேளை கனடாவிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் அன்சுல் ஜோன், கரி ஆனந்த சங்கரியின் கருத்துக்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்த்துக் கொண்டதாக நெசனல் போஸ்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
பொதுநலவாயக் கொள்கைகளின் அடிப்படையில், இரு நாடுகளும் தெளிவான புரிதல் மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலை கொண்டிருக்கும் வரை எந்தக் கருத்தும் இல்லை என்று அவர் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் அவரது கருத்துக்கள் கனேடிய கொள்கையை பிரதிபலிக்கின்றனவா என்பது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி எதனையும் கூறவில்லை என தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.