தந்தையைக் காட்டிக்கொடுத்த மகன்! - 28 தோட்டாக்களுடன் கைது
வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 28 தோட்டாக்களுடன் வீட்டு உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி - வட்டரக பகுதியிலுள்ள வீடொன்றின் உரிமையாளரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று தென் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
சந்தேகநபரின் மகன் பொலிஸ் அவசரப் பிரிவுக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், வட்டரக கிழக்கு மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்தத் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திடீர் கருத்து வேறுபாடு
ஹபராதுவ, அகுலுகஹ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரின் மகன் வீட்டுக்கு வந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது, சந்தேகநபர் தனது மகனிடம் வெடிமருந்துகள் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.
எனினும், நேற்று தந்தையுடன் ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாடு காரணமாக மகன் பொலிஸாருக்கு அந்தத் தகவலை அறிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
