பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி: முழு இராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு
நீலகிரி மாவட்டம்- குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்த கோர விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இறுதி கிரியைகள் முழு இராணுவ மரியாதையுடன் இடம்பெறவுள்ளன.
இவ்விபத்தின்போது இராணுவத்தளபதி உடன் அவர் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்கள் வெலிங்டனில் உள்ள இராணுவ ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று அதிகாலை முதல் அந்த ஆஸ்பத்திரிக்கு இராணுவ உயர் அதிகாரிகள் வருகைதந்ததுடன், பாதுகாப்பிற்காக இராணுவ ஆஸ்பத்திரி முன்பு துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
பின்பு முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட இறந்த 13 பேரின் உடல்கள் பெட்டியில் வைக்கப்பட்டு, அதன் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட இராணுவ டிரக்குகளில் ஏற்றப்பட்டன. இதையடுத்து இந்த இராணுவ டிரக்குகள், ஆஸ்பத்திரியில் காலை 10.30 மணிக்குப் புறப்பட்டு எம்.ஆர்.சி. இராணுவ முகாமிற்கு வந்தன.
வீரர்களின் உடல்களைச் சுமந்து வந்த இராணுவ டிரக்குகளுக்கு முன் இராணுவ இசைக்குழு இசைத்தபடி வந்தனர். தொடர்ந்து முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி ஆகியோரது உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக இறக்கப்பட்டன. தொடர்ந்து 3 டிரக்குகளில் இருந்தும் 13 பேரின் உடல்கள் இறக்கப்பட்டு, எம்.ஆர்.சி. முகாமில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
முதலில் ராணுவ உயர் அதிகாரிகள் 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியைச் சேர்ந்த வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர், முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 11.25 மணிக்கு எம்.ஆர்.சி. இராணுவ மையத்திற்கு வருகைதந்த அவர், பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து அங்கு நின்று 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து 11.35 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராணுவ மையத்திலிருந்து கோவை விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம், சீக்கியம் ஆகிய 4 மதத்தலைவர்கள் தங்களது மத நம்பிக்கைகளின் படி இராணுவ வீரர்களின் உடல்களுக்கு சடங்குகள் செய்து அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து 13 பேரின் உடல்களை ஏற்றிச் செல்ல தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இராணுவ மையத்திற்கு வந்தன. ஒரு வாகனத்திற்கு ஒரு வீரரின் உடல் என 13 வாகனங்களில் உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்றப்பட்டன.
இந்த அமரர் ஊர்தி வாகனங்கள் மதியம் 12.30 மணிக்கு எம்.ஆர்.சி. ராணுவ மையத்திலிருந்து புறப்பட்டன. அமரர் ஊர்தி வாகனங்களுக்கு முன் பொலீஸ் பைலட் வாகனமும், அதனைத்தொடர்ந்து இராணுவ பாதுகாப்பு வாகனமும் சென்றன. இந்த பாதுகாப்பு வாகனங்களில் பாதுகாப்புக்காகத் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்கள் இருந்தனர்.
பின்னர் மதியம் 2.50 மணியளவில் சூலூர் விமானப்படைத் தளத்துக்கு அமரர் ஊர்திகள் வந்து சேர்ந்தன. தொடர்ந்து சூலூர் விமானப்படைத் தளத்தின் நுழைவு வாயில் வழியாக அமரர் ஊர்தி வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன. அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் வழிநெடுக அமரர் ஊர்தியின் மீது மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து சூலூர் விமானப்படைத் தளத்தில் உள்ள விமான ஓடுபாதைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் 13 பேரின் உடல்களும் அதிலிருந்து இறக்கப்பட்டு, அங்கு ஏற்கனவே தயாராக நின்ற சி-130 சூப்பர் ஹெர்குலிஸ் ரக இராணுவ விமானத்தில் ஏற்றப்பட்டன. பின்னர் அந்த சிறப்பு விமானம் மாலை 3.30 மணி அளவில் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் அந்த விமானத்தில் சென்றனர். கோவை சூலூரில் இருந்து புறப்பட்ட விமானம் தலைநகர் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தை நேற்று இரவு 7.35 மணிக்குச் சென்றடைந்தது. அங்கு ஏற்கனவே தயார் நிலையிலிருந்த வீரர்கள் விமானத்திலிருந்து உடல்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வந்து வரிசையாக அடுக்கி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து பிபின் ராவத் உள்ளிட்டவர்களின் உடல்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அதனைத்தொடர்ந்து பல முக்கியஸ்தர்கள், உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே ஹெலிகொப்டர் விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் லக்பிந்தர் சிங் விட்டர் ஆகிய 3 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.
மற்றவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. எனவே 3 பேரின் உடல்கள் மட்டுமே அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், மற்றவர்களின் உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு பிறகே ஒப்படைக்கப்படும் என்று இந்திய இராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலம் விமான நிலையத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் டெல்லி காமராஜ் மார்க் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை இராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்பின்னர் இறுதி ஊர்வலம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
டெல்லியில் உள்ள பிரார் சதுக்கத்தில் உள்ள சுடுகாட்டில் பிபின் ராவத்தின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

