கோட்டாபயவின் செலவுக்கு ஒரு கோடியே 41 லட்சத்து 70 ஆயிரம் ரூபா நிதி
மக்களால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 2023 ஆம் ஆண்டில் ஓய்வூதியம் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதற்காக ஒரு கோடியே 41 லட்சத்து 70 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கோட்டாபயவுக்கு நிதி ஒதுக்கியது சட்டரீதியானதா?
முன்னாள் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி சட்டரீதியானதா என்பது தொடர்பில் வலுவான வாத விவாதங்கள் சட்டத்துறை வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஜனாதிபதி ஒருவருக்குரிய ஓய்வவூதியம் மற்றும் ஏனைய சிறப்புரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர் பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும் என வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பதவிக்காலத்தை நிறைவு செய்யாமை மற்றும் மக்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி பதவியில் இருந்து விரட்டியமை ஆகிய விடயங்களை அடிப்படையாக கொண்டு வாத விவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
வரவு செலவுததிட்டத்தில் கோட்டாபயவுக்கு நிதி ஒதுக்கிய ஜனாதிபதி
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்காக தாக்கல் செய்த வரவு செலவுத்திட்டத்தில் கோட்டாபயவுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வருடாந்த ஓய்வூதியமாக 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டடங்கள் மற்றும் நிர்மாணிப்புகளுக்காக 10 லட்சம் ரூபாவும் வாகனங்களுக்காக 20 லட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. வேறு செலவுகள் எனக்கூறி ஒரு கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.