மக்கள் வாழிடங்களில் இருந்து அகற்றும் திண்மக்கழிவுகளை அகற்ற நிதி வசூலிப்பு (Photos)
மக்கள் தாம் வாழும் இடங்களிலிருந்து அகற்றும் திண்மக் கழிவுகளை குறித்தொதுக்கப்பட்ட ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பதற்காக வாழும் மக்களிடம் இருந்து நிதி வசூலிப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள வலிகாமம் மேற்கு பிரதேச சபை அவ்வாறு குறித்த நிதியை மக்கள் வழங்கத் தவறும் பட்சத்தில் அதற்கான தண்டப்பணமும் அறவீடு செய்யப்படும் எனவும் தீர்மானித்துள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் நடனெந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இதில் குறித்த திண்மக்கழிவு தொடர்பான விவகாரம் சபையில் விவாதிக்கப்பட்ட போதே இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் துவாரகா ஜெயகாந்தன் கூறுகையில்,
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் பகுதிகளில் மக்களால் வெளியேற்றப்படும் திண்மக் கழிவுகளைப் பிரதேச சபை மூலம் அகற்றுவது தொடர்பில் ஒரு பொறிமுறை உருவாக்குவது அவசியமாகும்.
அதனூடாக பிரதேசத்தின் வீதிகள் தோறும் வீசப்படும் கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஓரளவேனும் எட்டமுடியும். அந்தவகையில் சோலைவரி போன்ற வரிகளைச் சபையால் அறவிடுவது போன்று ஒரு பொறிமுறையை நடைமுறைப்படுத்தி இதை நடைமுறைச் சாத்தியமாக்கலாம் சபைக்கு வருமான மீட்டல் கிடைப்பதுடன், சேதனப்பசளை உருவாக்கலை முன்னெடுக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் குறித்த இலக்கை எட்ட மாதாந்தம் அல்லது காலாண்டுக்கு ஒரு தடவை குறித்த ஒரு நிதியைத் தீர்மானித்து அதனை அதிகாரிகளைக் கொண்டு அறவிடுவது சிறந்ததென்றும் பிரதேசத்தின் சுகாதார கட்டமைப்பும் சிறப்பாகப் பராமரிக்க முடியும் என்று குறித்த கட்சியின் மற்றொரு உறுப்பினரான சிவகுரு பாலகிருஸ்ணன் வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை குறித்த நடைமுறை இறுக்கமாக் கொண்டுவரப்பட்டால் தான் சுகாதாரத்தைச் சீராகக் கொண்டுவர முடியும். என்றும் அதேநேரம் பணம் அறவிட்டால் இரு தரப்பினரிடையேயும் அது தொடர்பான அக்கறை ஏற்படும் என்றும் சபையின் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் வலி மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பொது அமைப்புகள் மற்றும் ஆலயங்களில் பெண்களுக்கும் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இடம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் துவாரகா ஜெயகாந்தன் முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்திருந்தார்.
அத்துடன் இவ்வாறான ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதினூடாக பெண்களுக்கும் தமது ஆற்றல்களையும் வகிபாகத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
குறித்த பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை ஆதரித்து அனைத்து கட்சியினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் சிவகுரு பாலகிருஸ்ணன் கூறுகையில்,
இது குறித்த பிரதேசத்தில் அவசியமாகக் கொண்டுவரப்பட வேண்டிய வரையறைகளுள் ஒன்று. இதனூடாக பெண்கள் ஆண்கள் என்ற பேதங்களின்றி பிரதேசத்தில் பல விடயங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க வாய்ப்பு உருவாக்கப்படும்.
கடந்த காலத்தில் உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 வீத வகிபாகம் கொடுக்கப்பட்டதால் இன்று சபைகளில் குறிப்பாகப் பிரதேச அரசியலில் பெண்களின் வகிபாகம் உயர்ந்துள்ளது.
அதனூடாக பல சிறப்பான மாற்றங்களும் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது ஆகவே இவ்வாறான சட்டத்தை எமது பிரதேசத்தையும் தாண்டி நாடு முழுவதும் நடைமுறையாவதற்கு சட்டவாக்கம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு நாம் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்க உத்தியோகத்தர்கள் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு தத்தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் கட்சிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளியாது செயற்படுபவர்களாகவும் செயற்படுவதே பிரதேசத்திற்கும் மக்களுக்கும் சிறந்ததாக அமையும் எனவும் சபையில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை முன்னிறுத்திக் குறித்த சபையின் உறுப்பினர்களை மையப்படுத்தி நேற்றைய பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் குறித்த பத்திரிகையிடம் விளக்கம் அல்லது தெளிவான செய்தியைப் பிரசுரித்தலைச் சபை கோரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.