யாழ். மாவட்டத்தில் பொலிஸாரிடம் மாவட்ட செயலாளர் முன்வைத்துள்ள கோரிக்கை (Photo)
யாழ். மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமூகமாக எரிபொருளை விநியோகிப்பதற்கு பொலிஸார் ஒத்துழைத்து வழங்க வேண்டும் என மாவட்ட செயலாளர் மகேசன், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலாளர் தலைமையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த கலந்துரையாடலில் மேலும், எரிபொருள் வரிசையில் இடம்பிடித்து வைத்தல், வரிசையில் மூன்று நாட்களுக்கு முன்னமே காத்திருந்து வாகனங்களை நிறுத்துவது போன்றவற்றை மக்கள் தவிர்க்க வேண்டும்.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள டீசல் இறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் |
பொலிஸாரிடம் கோரிக்கை
முதல் நாளே எரிபொருள் வரிசையில் நிற்பவர்களை அப்புறப்படுத்த பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். பொதுமக்களுக்கென ஒரு வரிசை, பெண்களுக்கென ஒரு வரிசை, உத்தியோகத்தர்களுக்கென ஒரு வரிசை என ஒழுங்கு முறையை ஏற்படுத்தி செயற்பட வலியுறுத்தி இருக்கின்றோம்.
அதனை நடைமுறைப்படுத்துவது எரிபொருள் நிரப்பு நிலைய முகாமைத்துவத்தின் கடமையாகும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு நேரங்களின் போது பல துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக அறிக்கையிடப்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக இரவு நேரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.
எரிபொருள் நிரப்பு நிலையம்
இருந்தபோதும் பலதரப்பட்ட காரணங்களின் நிமித்தம் பிரதேச செயலகத்தினரும், எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களும், பொலிஸாரும் இணைந்து நிலைமைக்கேற்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை மூடுவது பற்றி தீர்மானிக்க முடியும்.
மாலை 5 மணிக்கு பின்னர் எரிபொருள் கிடைக்குமாக இருந்தால் அதனை மறுநாள் விநியோகிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதற்கான முடிவும் பிரதேச செயலக மட்டத்தில் சூழ்நிலையை கருத்திற்கொண்டு தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. சட்டவிரோத செயல்களை தவிர்த்து அனைவருக்கும் எரிபொருள் கிடைக்க செயற்பட வேண்டும்.
அதிகளவு மோட்டார் வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உள்ளே இருப்பதால் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
ஏனைய வாகனங்கள்
அதனால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரிகின்ற ஊழியர்களின் மோட்டார் வண்டிகளைத் தவிர தரித்து நிற்கும் ஏனைய வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கோரியிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட செயலர் க.மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க
அதிபர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர், இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன வடபிராந்திய முகாமையாளர், எரிபொருள்
நிரப்புநிலைய உரிமையாளர்கள் முகாமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.