எரிபொருள் விலை அதிகரிப்பு: மன்னார் எரிபொருள் விற்பனை நிலையத்தில் குவிந்த மக்கள்(Photo)
மன்னாரில் பெட்ரோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு
முன் திடீரென மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோலின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக வெளியான செய்தியை தொடர்ந்து மன்னாரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் வாகனங்களுக்கான பெட்ரோலை கொள்வனவு செய்ய இன்று(7) மதியம் முதல் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு
மன்னார் நகர் பகுதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெட்ரோலை பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள்,முச்சக்கர வண்டி மற்றும் கார் ரக வாகனங்களில் வருகை தந்தவர்கள் நீண்ட வரிசையில் நின்று தமது வாகனங்களுக்கு தேவையான பெட்ரோலை பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும் மன்னாரில் லிட்ரோ எரிவாயு விநியோகம் கடந்த பல நாட்களுக்கு முன்னர் இடை நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் பாவனையாளர்கள் எரிவாயு கொள்கலனை பெற்றுக்கொள்ள நாளாந்தம் எரிவாயு கொள்கலன் விற்பனை நிலையங்களுக்கு முன் ஒன்று கூடியுள்ளனர்.
எரிவாயு கொள்கலன்கள்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மன்னாரில் உள்ள லிட்ரோ எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்னால் நூற்றுக்கணக்கான முடிவடைந்த எரிவாயு கொள்கலன்களை வீதிக்கு அருகில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
ஏனைய மாவட்டங்களில் பல முகவர்கள் ஊடாக நூற்றுக்கணக்கான லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. எனினும் மன்னார் மாவட்டத்தில் ஒரு தடவை மாத்திரமே எரிவாயு விநியோகிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக உயர் அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக மக்கள்
விசனம் தெரிவித்துள்ளனர்.