எரிபொருள் விநியோக அட்டை : எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் குழப்பநிலை
நாடளாவிய ரீதியில் வாகன இலக்கங்களுக்கு ஏற்ப எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பமான சூழ்நிலைகளும் பதிவாகி வருகின்றது.
யாழ்ப்பாணம்
யாழ். கல்வியங்காடு எரிபொருள் நிலையத்தில் இன்றைய தினம் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கும் கோபாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கும் இடையிலே ஏற்பட்ட வாய் தர்க்கத்தால் இளைஞன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
நல்லூர் பிரதேச செயலாளருக்கு உட்பட்ட கல்வியங்காட்டில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் வாகனங்களுக்கு டீசல் பெறுவதற்காக சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் நின்றுள்ளது.
குறித்த வரிசையில் நின்ற அநேகமான வாகனங்கள் எரிபொருள் பங்கீட்டு அட்டை இல்லாமல் தமக்கான எரிபொருளை வழங்குமாறு கோரிய நிலையில் பொலிஸாருக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த வாகன சாரதிகள் தாங்கள் கிராம சேவையாளர் இடம் சென்று தமது வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்புவதற்கான பங்கீட்டு அட்டையை தருமாறு கோரியும் தமக்கு வழங்கப்படவில்லை.
நாம் கேட்டதற்கு கிராமசேவையாளர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த எரிபொருள் பங்கீட்டு அட்டை தமக்கு கிடைக்கும் எனவும் அதன் பின்னே வழங்க முடியும் என தெரிவித்ததாக தெரிவித்துள்ளனர்.
மாவட்ட செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்ட வாகன இலக்கத்துக்கு எரிபொருளை வழங்குமாறு கோரியும் தமக்கு வழங்க முடியாது என எரிபொருள் நிலையத்தினரும் பொலிசாரும் மறுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதான் போது பொலிஸாருக்கும் அங்கு நின்றவர்களுக்கும் இடையில் கடுமையான வாய் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் குறித்த கூட்டத்தில் இருந்த ஒருவரை பொலிஸார் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த இடத்துக்கு வருகை தந்த நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் வாகன சாரதிகளுடன் கலந்துரையாடிய நிலையில் நிலைமை சுகமான நிலைக்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா
வவுனியா- வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
வாகன இலக்கதகடுகளின் கடைசி இலக்கமான 0,1,2 ஆகிய இலக்க மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், சொகுசு கார்கள் என்பவற்றுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், எரிபொருள் பெறுவதற்கு செல்லுமிடத்தில் வாகனங்கள் கூடியமையால் வரிசையில் நின்றோருக்கும், ஏனையவர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு அமைதியின்மை நிலவியது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த நெளுக்குளம் பொலிஸார் அமைதியின்மை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி திலீபன்
