ஜூலை மாதத்துக்குள் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 198 மில்லியன் டொலராகக் குறையும்..!
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் ஸ்திரமாக இருக்கும் பட்சத்தில் அல்லது தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் பட்சத்தில், இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் வரும் ஜூலை மாதத்துக்குள் கணிசமான அளவு குறையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
நாட்டின் எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
11 எரிபொருள் கப்பல்கள்
உலகச் சந்தையில் நிலவிய அதிக விலை மற்றும் மின் உற்பத்திக்காக மேலதிக எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தமை காரணமாக, அண்மைக்காலமாக எரிபொருளுக்கான டொலர் வெளிப்பாய்ச்சல் நாட்டில் கடுமையாக அதிகரித்திருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "வழமையாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது எரிபொருள் இறக்குமதிக்காக மாதத்துக்குச் சராசரியாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையே செலவிட்டு வந்தது.

எனினும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தச் செலவினம் 522 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிரடியாக உயர்ந்தது. இதற்கான கொடுப்பனவுகள் கடந்த மே மாதத்திலேயே செலுத்தப்பட்டன. உண்மையில், எரிபொருள் கொள்வனவுக்காக நாட்டிலிருந்து அதிகளவிலான டொலர்கள் வெளியேறிய மாதமாக கடந்த மாதம் பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 11 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டன.
அவை அனைத்துமே சர்வதேச சந்தையில் விலை அதிகமாகக் காணப்பட்ட காலகட்டத்திலேயே கொள்வனவு செய்யப்பட்டன. அத்துடன், மின் உற்பத்திக்காக மாத்திரம் பிரத்தியேகமாக ஒரு மேலதிக டீசல் கப்பலை நாம் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. அதுவும் அதிக விலைக்கே வாங்கப்பட்டது.
அமெரிக்க டொலர்கள்
டொலர் செலவினம் இந்தளவு அதிகரிக்க இதுவே பிரதான காரணமாக அமைந்தது. இருப்பினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதற்கமைய, 522 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்த எரிபொருள் இறக்குமதிச் செலவினம், இந்த ஜூன் மாதத்தில் 318 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. எமது தற்போதைய கணிப்புகளின்படி, வரும் ஜூலை மாதமாகும்போது இதனை மேலும் 198 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை குறைக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம்." - என்றார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கான கச்சா எண்ணெய் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளமையே இந்தச் செலவுக் குறைப்புக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா, சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளுக்குத் தேவையான அனைத்துக் கச்சா எண்ணெய்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் உறுதிப்படுத்தினார்.
அடுத்தகட்ட நடவடிக்கை
உலகச் சந்தை நிலவரங்கள் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், "தற்போதைய சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, டீசல் விலையானது படிப்படியாகக் குறைந்து வருகின்றது.
உலகச் சந்தை விலை இதே மட்டத்தில் நீடித்தால் அல்லது மேலும் குறைந்தால், எவ்வித பெரிய சிக்கல்களுமின்றி இந்தச் செலவினங்களை எம்மால் மேலாண்மை செய்ய முடியும். இதுவே எமது திட்டமாகும்.

இருந்தபோதிலும், ஜூலை மாதத்துக்குப் பின்னரான நிலைமையானது சர்வதேச சந்தையின் மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றிலேயே தங்கியுள்ளது. தற்போதைக்கு ஜூலை மாதம் வரையிலான தெளிவான திட்ட வரைவு எங்களிடம் உள்ளது.
அதற்குப் பிறகான சூழலை உலகச் சந்தை விலைகளைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும். சர்வதேச சந்தையில் மீண்டும் விலை அதிகரிப்பொன்று ஏற்பட்டாலோ அல்லது உலகளாவிய மோதல்கள் தீவிரமடைந்தாலோ, அது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துத் தீர்மானிக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan