கதிர்காமத்திலிருந்து காங்கேசன்துறை வரை! - மீள் பிரசுரம்
பாடசாலைக் காலங்களில் தவணை விடுமுறை நாட்கள் என்றால், அதைபோல் சந்தோஷம் வேறு ஒன்றும் இல்லை. இலங்கையில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கும் - பதவி, ஊழியம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசினால், இலங்கை புகையிரத்தில் இலவசமாக பிரயாணம் செய்வதற்கு, ஆண்டுதோறும் மூன்று புகையிரதச் சீட்டுக்கள் - முதலாம், இரண்டாம் மூன்றாம் வகுப்பென தகமையை பொறுத்து வழங்கப்படுவது வழக்கம். (காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
இதன் அடிப்படையில் எமது தகப்பானருக்கும் எமக்கும் ஆண்டுதோறும் மூன்று முதலாம் வகுப்பு இலவச புகையிரதச் சீட்டுக்கள் கிடைப்பது வழமை. இதனால் நாம் இலங்கைதீவில் கதிர்காமம் முதல் மலைநாடு, மட்டக்களப்பு, திருகோணமலை, சிலாபம், புத்தளம், அனுராதபுரம், பொலனறுவை, மன்னார் உட்பட காங்கேசன்துறை யாழ்குடா நாட்டின் தீவுப் பகுதிகள் யாவும் விடுமுறை காலத்தில் சென்று பார்ப்பதுள்ளோம்.
சிலவேளைகளில் அன்றைய “இலங்கை விமானச் சேவை” மூலம் பாலாலி, இரத்மலான, திருகோணமலையில் உள்ள சீனக் குடா ஆகிய இடங்களுக்கு விமானத்தில் பிரயாணம் செய்துள்ளோம். ஆனால் இன்று அன்று நாம் கண்டவற்றை, கேட்டு அறிந்தவற்றை எண்ணிப்பார்க்கும் பொழுது மனதில் சொல்ல முடியாத கவலை ஏற்படுகின்றது.
இன்று இலங்கைதீவில் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் படிப்படையாக எவ்வளவு தூரிதமாக வளர்ந்துள்ளது என்பதற்கு ஓர் ஊதாரணத்தை இங்கு கூற விரும்புகிறேன். எனது தகப்பனார் 1949ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் கல்முனை தொகுதியில் பாடசாலை பரிசோதகராக கடமையாற்றிய வேளையில், இலங்கையின் முதலாவது பிரதமர் காலஞ்சென்ற டி. எஸ். சேனநாயக்க கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தபொழுது, ஓர் சிவில் உத்தியோகத்தரான எனது தகப்பானரே பிரதமர் டி. எஸ். சேனநாயக்கவை வரவேற்று பாடசாலை மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியதையை ஏற்றுக்கொண்டார்.
அது மாத்திரமல்லாது, அவ்வேளையில் பிரதமர் சேனநாயக்க சிங்களத்திலோ அல்லது ஏமாற்றுத் தமிழிலோ உரையாற்றாது, ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை, எனது தகப்பனார் தமிழில் மொழிபெயர்த்தார்.
பிரதமர் கல்முனை தொகுதிக்கு விஜயம் செய்த 1949ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 3ம் திகதி, எமது மூத்த சகோதரி கல்முனை அரசினர் வைத்தியசாலையில், அப்போதைய சாதனையான பன்னிரன்டு இறாத்தல் எடையுடன் பிறந்திருந்தார்.
இதை அறிந்த பிரதமர், உடன் கல்முனை அரசினர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, பிறந்திருந்த எனது
சகோதரியையும் எனது தாயாரையும் பார்வையிட்டார். அவ்வேளையில் பிரதமர் எனது தாயாரிடம் “இந்த உடம்பான தகப்பானருக்கு பன்னிரன்டு இறாத்தல் எடையுடன் ஓர் குழந்தை பிறப்பது ஓர் சாதனை அல்லா” என பகிடியாக கூறியதை இன்றும் எனது தயார் நினைவு கூருவார்.
நாம் கதிர்காமத்திற்கு 60வது, 70ல் இறுதியாக 87லும் சென்றுள்ளோம். அங்கு ஓர் கலாசாரமும் சமயமும் அடியோடு அழிக்கப்படுவதற்கான சன்றுகள் நிறைய உண்டு. அதேபோல் நாம் இறுதியாக 2004ம் ஆண்டு மலைநாட்டிற்கு அதை அண்டிய பிரதேசங்களுக்கு சென்றிருந்த சமயம், 60களில் நாம் அங்கு கண்ட எவற்றையும் காண முடியாமல் இருந்தது. திருகோணமலை மட்டக்களப்பு பகுதிகளிலும் அதே சோக நிலை தான்.
இவ் மாற்றங்கள் யாவும் எமக்கு என்ன செய்தியை கூறுகின்றனா? உலகில் பெரும் மாற்றங்கள,; கட்டிடங்கள் நிறைந்த நகரங்களாகவும், புதிய பூங்காக்கள் நிறைந்த நிலங்களாகவும் - நவீனமயப்படுத்தல் தரம் உயர்த்தல் என்ற அடிப்படையில் தினமும் நடைபெறுகின்றன. ஆனால் இலங்கைதீவில் நடைபெற்ற நடைபெறுகின்ற மாற்றங்கள் யாவும் இவ் அடிப்படையில் நடைபெறவில்லை.
நாம் கதிர்காமத்திற்கு செல்லும் ஒவ்வொரு தடவையும், அங்கு மிகவும் அன்புடன், துப்பரவாக சுகாதாரமாக பேணப்பட்ட இராமகிருஷ்ண மண்டபத்திலேயே தங்குவது வழக்கம். இதை ஓர் சுவாமியர் மிக ஒழுங்காக பேணி வந்தார். கதிர்காமத்திற்கு தூர இடங்களிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இங்கு தினமும் மதிய, இரவு போசனங்கள் வழங்கப்படுவது வழக்கம்.
கதிர்காமத்தில் பல சைவக் கோயில்கள், தமிழர்களினால் பரமரிக்கப்பட்டு, தமிழ் பிராமணர்களால் தினமும் பூசைகள், ஆபிசேகங்கள், ஆரதனைகள் நடைபெற்று வந்தன. கதிர்காமத்தில் திரும்பும் திசை எல்லாம் தமிழ் பக்திப் பாடல்களை ஓலிபெருக்கியில் நாம் கேட்கக் கூடியதாகவிருந்தது.
மாட்டுவண்டியில் செல்லக் கதிர்காமம்
நாம் 60களில் கதிர்காமம் சென்றிருந்த வேளைகளில், செல்லக் கதிர்காமம் போவதற்கு ஒழுங்கான தெருக்கள் இல்லாத கரணத்தினால், மூன்று மையில் காட்டுப் பிரதேசங்கள் ஊடாக இரண்டு மாட்டுவண்டி மூலம் செல்லக் கதிர்காமத்தை அடைந்தோம்.
அங்கு செல்லும் வழியில் காட்டில் ஓர் மான் இறந்து கிடைத்தை நாம் கண்டது, இன்றும் எனக்கு ஞாபகத்தில் உள்ளது. எம்மை கூட்டிச் சென்ற இரண்டு மாட்டுவண்டில்காரரும் சிங்களவர்கள் ஆனால் எம்முடன் சாரளமாக தமிழில் உரையாடினார்கள்.
அன்று நாம் கொழும்பிலிருந்து புகையிரம் மூலம் மாத்தறை சென்று, அங்கிருந்து பஸ் வண்டி மூலம் கதிர்காமம் செல்வது வழக்கம். அதேபோல் கொழும்பிலிருந்து நேராக மோட்டார் வண்டியில் கதிர்காமம் செல்வதானால், களுத்துறை பட்டினத்தில் தங்கி நின்று செல்வது வழக்கம். அப்பொழுது களுத்துறை பட்டினத்தில் உள்ள தமிழ் தேனீர்கடைகள் போட்டி போட்டு தமிழ் பாடல்களை ஒலிபரப்பி மூலம் மிகவும் சத்தமாக ஒலிபரப்புவார்கள்.
ஆனால் இன்றைய நிலைமை வேறு. காலம் காலமாக திட்டமிடப்பட்டு சிறிது சிறிதாக யாவும் பறிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. கதிர்காமத்திலிந்த இராமகிருஷ்ண மண்டபம் 1970களில் சிங்கள அரசினால் வலோத்காரமாக பறிமுதல் செய்யப்பட்டு, ஓர் பௌத்த நூதனசாலையாகவுள்ளது. நாம் இறுதியாக 87லும் சென்றபொழுது சைவக் கோயில்கள் யாவும் தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு, பத்து அடி நீளம் உள்ள நினைவுத்தூபி போல் காட்சியழிக்கிறது.
தமிழ் விற்பனை நிலையங்களோ அல்லது கதிர்காமத்தில் தமிழர் இருந்த அடையாளம் இல்லாது சுத்திகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து 1980களில் கதிர்காமம் சென்ற யாத்திரிகர் ஒருவர், அங்கு சிகை அலங்கர நிலையம் ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலைநாட்டில் சிவனொளிபாதமலை உட்பட சகல பிரதேசங்களில் தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள். சிவனொளிபாதமலையில் உச்சியில் உள்ள பாத அடையாளத்தை - இந்துக்கள், பௌத்தர்கள், முஸ்லிம்கள் யாவரும் தமது கடவுளின் பாதமாக கொள்கிறார்கள்.
தற்பொழுது மலைநாட்டில் நிலைமைகள் மாறி வருகின்றன. கண்டியில் செல்வப் பிள்ளையார் (விநாயகர்) கோயிலுக்கு அருகாமையில் இருந்த “தமிழ் இல்லத்தில்” மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து கண்டியில் உத்தியோக ரீதியாக வந்த திருமணமாகாத தமிழர்கள் யாவரும் தங்கியிருந்தார்கள்.
இவ் இல்லத்தின் கதையோ மிகவும் சோகமானது. சிங்களக் கிளர்ச்சியாளர்கள் இரவோடு இரவாக இவ் இல்லத்தை அழித்து விட்டார்கள்.
கதிர்காமத்திலும் மற்றைய இடங்களிலும் தமிழர் மீள் குடியேற்றம்!
கடந்த ஆண்டு யுத்தம் முடிவடைந்த நாளிலிருந்து ராஜபக்சக்களும், இவர்களதுசகாக்களும் வெளிப்படையா, “சிறிலங்காவில் எந்த இடமானலும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ உரியதல்லா, யாவரும் தாம் விரும்பிய இடங்களில் வாழ உரிமை உடையவர்கள்;” என கூறிவருகிறார்கள். இக் கூற்று உண்மையனதாக இருந்தால், முன்பு தமிழர் வாழ்ந்த கதிர்காமம், மலைநாடு, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மற்றைய பகுதிகளில் தமிழர் உடன் மீழ் குடியேற்றம் செய்வதற்கு ராஜபக்சக்களின் அரசு முன்வந்து உதவ வேண்டும்.
தமிழர்களின் சரித்திரத்தை பொறுத்த வரையில,; இலங்கைதீவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னைய ஐந்து பாடல் பெற்ற தலங்களான “ஈஸ்வரங்கள்”; உள்ளன. திருகோணமலையில் “திருக்கோணேஸ்வரம்”, சிலாபத்தில் “முனீஸ்வரம்”, மன்னர்-பாலாவியில் “திருக்கேதீஸ்வரம்”, நான்காவதாக காலியிலிருந்த “தொண்டேஸ்வரம்”, போத்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் முற்றாக அழிக்ப்பட்டு, அதே இடத்தில் இன்று பௌத்த விதிமுறைகளுக்கு அமைய, ஓர் விஷ்ணு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது “ ஈஸ்வரம்”;, காங்கேசன்துறையில் உள்ள கீரிமலையில் “நகுலேஸ்வரம்” உள்ளது.
கீரிமலையில் சிங்களக் குடியேற்றங்கள் மிக அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்துடன், புத்த கோயிலும் மிக விரைவில் அங்கு அமைக்கப்படுவதற்கா சாத்வீகக் கூறுகள் உண்டு. இலங்கைதீவில் உள்ள “ஈஸ்வரங்கள்”; யாவும் நாளுக்கு நாள் அவற்றின் முக்கியத்துவங்களை இழந்து வருகின்றன.
திருகோணமலையின் காட்சிகள் மனதை உருக்குகின்றது! நாம் 60, 70களில் அங்கு சென்ற வேளையில், திருகோணமலை பட்டினத்தில் சிங்களவர் யாரும் வாழவில்லை.
திருக்கோணேஸ்வரத்தை அண்டிய பிரேட்ரிக் கோட்டையினுள் சில சிங்களவர் வேலை செய்வதைக் கண்டோம். நாம் 2004ம் ஆண்டு அங்கு சென்ற சமயம் திருகோணமலை பட்டினம் மட்டுமல்லா, அதன் விவசாயக் கிரமங்களான தம்பலகாமம், சுடுநீர் கிணறுகள் உள்ள கன்னியா போன்ற இடங்களில் சிங்களவர்கள் குடியேறியுள்ளது மட்டுமல்லாது, இந்துக் கோயில் அழிக்கப்பட்டு புத்த கோயில்கள் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ளனா. தமிழ் மக்கள் நிம்மதியாக – நீர்கொழும்பு, புத்தளம், சிலபம், உடப்பு, வவுனியா போன்ற பகுதிகளில் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று அங்கு வாழும் தமிழர்களின் எண்ணிக்கை என்ன?
இலங்கைதீவை பொறுத்த வரையில் கிறீஸ்தவர்கள் பெரிதாக யாத்திரை செல்லாவிடிலும், கிறீஸ்தவ கத்தோலிக்கர்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள “மடு மாதா” ஆண்டு உற்சவத்திற்கு இலங்கையின் பல பகங்களிலிருந்தும் வருகை தருவது வழக்கம். இத் தேவலாயத்திற்கு உற்சவம் அல்லாத காலத்தில் சென்று வழிபட்டிருக்கிறேன். காட்டுப் பிரதேசத்தில் மிக அமைதியாக உள்ள ஒரு தேவலாயம். அங்கு உற்சவம் அல்லாத காலங்களில் போகும் வேளைகளில், சமய குருமார்களையும், தொண்டர்களையும் மட்டுமே நாம் காணக்குடியாத இருக்கும். அத்துடன் பெருமளவில் “இலையான்” தொல்லையும், தெரு நீண்டுக்கு வெள்ளை வண்ணாத்திப் பூச்சிகளையும் காண முடியும்.
மன்னார், பாலாவி, திருக்கேதீஸ்வர பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் - சிங்கள இராணுவத்தின் தொல்லையாலும், உயர் பாதுகாப்பு பிரதேசம் என்ற காரணங்களினலும் வெளியேற்றப்பட்டனர். 1984ம் ஆண்டு கீரிமலையில் நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கேணியில், எந்த திசையிலிருந்தும் எந்த ரவைகளும் எம்மை நோக்கி வரலாம் என்ற பிதீயின் மத்தியில் அங்கு நாம் நீராடினோம்.
ஜனாதிபதி நீதி நியாயம் உள்ளவராக இருக்க வேண்டும்
இலங்கைதீவில் தமிழர் வசித்த, வசிக்கின்ற எந்த இடங்களை பார்வையிட்டாலும், அங்கங்கே ஓர் இனத்தினுடைய அரசியல், பொருளாதரம், கலாச்சாரம் போன்றவை திட்டமிட்டு அழிக்கப்பட்ட அழிக்கப்படுகின்றதற்கான சான்றுகள் நிறைய காணப்படுகின்றனா! ஜனதிபதி, பாரபட்சம் அற்றவராகவும், யாவரையம் சமனாக நடத்துபராகவும் இருக்க வேண்டும்.
ஜனதிபதி ராஜபக்சவும் அவரதும் சகோதர சகக்களும், தாம் இனத்துவேசம் பாரபட்சம் அற்றவர்களென நிரூபிக்க விரும்பினால், இவர்கள் உடனடியாக, கதிர்காமம் முதல் காங்கேசன்துறை வரை விரட்டி துரத்தப்பட்ட தமிழரை அங்கங்கே மீழ் குடியேற்றம் செய்ய முன் வரவேண்டும். இதன் மூலம் ராஜபக்சக்கள் ஓர் ஐக்கிய இலங்கைகான அடிக்கல்லை நாட்ட முடியும்.
1970க்களில், ஜே ஆர் ஜெயவர்த்தானவும், அவரது பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலியும், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை வெளிநாடு செல்லா அனுமதிப்பதன் மூலம், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை முறியடிக்க முடியுமென கனவு கண்டார்கள். ஆனால் வெளிநாடு சென்று உலகம் பூராகவும் உள்ள வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள,; இன்று சிறிலங்கா அரசிற்கு ஓர் மாபெரும் எதிர் சக்தியாக உள்ளார்கள்.
இன்று ஏறக்குறைய ஐந்திலிருந்து ஆறு லட்சம் வடக்கு கிழக்கில் வாழு;ந்த தமிழ் மக்கள் வெளிநாடுகளில் நாகரீகம் அடைந்த ஜனநாயக நாடுகளில் அவ் நாட்டு பிரஜைகளைப் போன்று அரசியலில் சம உரிமை பெற்று வாழுகின்றனர். இதை வேறு வடிவத்தில் கூறுவதானால், இலங்கை தீவிலிருந்து தமிழர்கள் சிங்கள அரசுகளால் விரட்டப்பட்டாலும், உலகம் பூராகவும் தமிழ் மொழி, கலை கலாச்சாரம், நல்ல தராதரத்திலும் சம அந்தஸ்து பெற்றுள்ளது. இது காலப்போக்கில், சிறிலங்கா அரசிற்கு மிக எதிர்மாறான நிலைமைகளை உருவாக்கலாம்.
இன்று ராஜபக்சக்களின் நடவடிக்கைகளை, குறுகிய நோக்கம் கொண்ட சிலர்; பராட்டலாம். ஆனால் தெற்கின் எதிர்காலச் சந்ததியினர், ராஜபக்சக்ளால் தான் இலக்கைதீவு மிக குட்டிச் சுவராகி உள்ளதாக குறை கூறும் நிலையும் உருவாகும்.
தெற்கிலிருந்து, ஓர் இரு கல்விமான்களும், புத்திஜீவிகளும், தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டுமென, வேறு பல நாடுகளின் உதரணங்களை மேற்கோள் காட்டி சில கட்டுரைகளை எழுதியுள்ளனர். ஆனால் அனுபவ ரீதியாக நாம் கண் கண்ட உண்மை என்னவெனில், உலகில் பல அரச குடும்பத்தினர், ஜனதிபதிகள், பிரதமர் போன்றோர், மதிப்புக்குரிய
விஞ்ஞானி ஐசாக் நியூட்டனின், “இசைவாக்க சட்டத்திற்கு” ஆளாகியுள்ளனர். இசைவாக்க சட்டம் என்ன கூறுகிறதெனில், “ஓவ்வொரு தாக்கத்திற்கும் எப்பொழுது சமனான அல்லது எதிர்மாறான தக்கம் உண்டு” என்பதுடன், பூவியின் ஈர்ப்பு சக்தி காரணமாக, “மேலே போகும் ஓவ்வொரு பொருளும், கீழே வந்தாகவே வேண்டும்” என்பதே. ஆகையால் இலங்கை தீவில், ராஜபக்சக்களின் எதிர்காலத்தை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் S.V Kirubaharan அவர்களால் வழங்கப்பட்டு 09 Feb 2021 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை S.V Kirubaharan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.



