பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஏப்ரல் முதல் 1000 ரூபா நாளாந்த வேதனமாக கிடைக்கும் - ரமேஷ் பத்திரன
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா நாளாந்த கொடுப்பனவு ஏப்ரல் மாதத்தில் முதல் தடவையாக கிடைக்கும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ரூபா சம்பள நிர்ணயத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல வினாக்கான விடைகள் கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் வருண லியனகே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா நாளாந்த கொடுப்பனவு குறித்து கேள்வி எழுப்பினார்.
"பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலமாக தெரியப்படுத்தியுள்ளது.
எனினும் அரசு நிர்வகிக்கும் தோட்டங்களிலும் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கவில்லை. எனவே இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சபையில் வலியுறுத்தினார்.
இதன்போது இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஸ் பத்திரண, சகல பெருந்தோட்ட கம்பனிகளும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளதாக கூறினார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அதிகளவில் சிரமங்களை எதிர்கொண்டார்.
பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சம்பள நிர்ணய சபையின் மூலமாக தீர்மானம் ஒன்றினை எடுத்துள்ளோம்.
பெருந்தோட்டக் கம்பனிகள் வழக்குத் தொடுத்திருந்த போதிலும் நேற்று எமக்கு சாதகமான தீர்ப்பு ஒன்று கிடைக்கப்பெற்றது. சம்பள விடயங்களை முன்னெடுத்து செல்லக்கூடிய அனுமதியை எமக்கு நீதிமன்றம் பெற்றுக்கொடுத்துள்ளது. எனவே ஏப்ரல் மாதத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் முதல் தடவையாக கிடைக்கும்.
இது அரசங்கத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். சகல பெருந்தோட்டக் கம்பனிகளும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.