டிட்வா புயல் நிவாரண நிதியில் மோசடி: ஈ.பி.டி.பி. கட்சி சுட்டிக்காட்டு
மட்டக்களப்பு - பாலமீன்மடு பிரதேசத்தில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய நிதியில் முறைகேடு நடந்திருக்கின்றது. எனவே அரசாங்க அதிபர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(08.02.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மோசடி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்களில் முறைகேடு இருப்பதாக அறிந்து, அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
குறிப்பாக, பாலமீன்மடு பிரதேசத்தில் அரசியல் கட்சியின் தலையீட்டின் காரணமாக மறைமுகமாக முதல் கட்டமாக 24 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த நாங்கள் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். இதனைத் தொடர்ந்து விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழு பாலமீன்மடுவிற்கு சென்று பார்வையிட்டது.
எனினும், அந்த விசேட குழு காசிநாதர் வீதியை பார்வையிடவில்லை. அதேவேளை, குழந்தை இயேசு வீதியை மட்டும் பார்வையிட்டு, அதில் ஒருவருக்கு மட்டும் நிதி வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை.
இந்த முறைகேடான செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், தங்கள் வீடுகளில் வெள்ளநீர் நிறைந்திருப்பதை ஆதாரங்களுடன் ஆவணமாக சமர்ப்பித்து, அவற்றை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் அனுப்புமாறு என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம் நடக்கும்..
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமமான நீதி வழங்காமல், சிலருக்கு மட்டுமே நிதி வழங்குவது முற்றிலும் தவறானதாகும். மட்டக்களப்பு நகரில் 48 கிராம சேவகர் பிரிவுகள் உள்ள நிலையில், 40 பேருக்கு மட்டும் நிவாரணம் வழங்கி 8 பிரிவுகளுக்கு வழங்கப்படவில்லை என்றால் அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகும்.
அதுபோன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த 25 ஆயிரம் ரூபாய் கிடைக்காவிட்டால் அவர்களுக்கு அதிருப்தி ஏற்படும்.

எனவே, பாலமீன்மடுவில் அமைக்கப்பட்ட விசேட குழுவின் செயல்பாடுகளில் முறைகேடு இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இதனை மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, மக்களால் வழங்கப்பட்ட ஆவணங்களை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கும் சமர்ப்பிக்க உள்ளோம்.
பாலமீன்மடுவின் 178 பி கிராம சேவகர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 44 பேருக்கு நிதி வழங்கப்பட்டதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களில் சிலரின் பெயர்கள் இடம்பெறாததால், இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
இதுகுறித்து கணக்காய்வு திணைக்களம் விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தபடி, மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடத் தயாராக உள்ளனர்.
எனவே, மக்கள் மற்றும் அதிகாரிகள் இருவரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகாமல், இந்த வெள்ள நிவாரணத்தை துரிதமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri