வவுனியாவில் மனித உரிமைகள் இயக்கம் என்னும் பெயரில் இளம் பெண்களால் பணமோசடி
வவுனியாவில் மனித உரிமைகள் இயக்கம் என்னும் பெயரில் இளம் பெண்களால் பணம் பெற்று மோசடி இடம்பெறுவதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, கைது செய்யப்பட்ட பெண்கள் எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, குட்செட் வீதியில் இன்று (21.07) காலை முதல் 6 இளம் பெண்கள் வீடு வீடாகச் சென்று தாம் மனித உரிமைகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு என பணம் பெற்றுள்ளனர்.
அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தையும் பெற்றுக்கொண்டதுடன், பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த 6 பெண்களில் ஒருவர் தமக்குக் கீழ் 500 ரூபாய் சம்பளத்திற்குப் பெண்களைத் திரட்டி வீடு வீடாகச் சென்று பணம் பெற்று அதில் தான் நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் வீதம் பணம் எடுத்துக் கொண்டு மிகுதிப் பணத்தை அனுராதபுரத்தில் உள்ள பெண் ஒருவருக்கு வழங்கி வந்ததாக விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, 5 பெண்களையும் வழிநடத்திய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடுமையான எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார். இவ்வாறான மோசடியில் ஈடுபட்டவர்கள் தாண்டிக்குளம், கோவில்குளம், விக்ஸ்காடு, கற்குளம் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.