முன்னாள் இராணுவ தளபதியிடம் விசாரணை! ஈஸ்டர் தாக்குதலில் மறைந்துள்ள மர்மம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடந்த நேரத்தில் இராணுவப் புலனாய்வு பிரிவின் செயல்பாடு மற்றும் பொறுப்புகளைப் பிரிப்பது தொடர்பான பல உண்மைகளைக் கண்டறிவதே இதன் நோக்கமாகும்.
இந்த விசாரணைகள் தொடர்பாக கடந்த வாரம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடமிருந்தும் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்றது.
பிரதி பொலிஸ் மா அதிபரிடமும் வாக்குமூலம்
மேலதிகமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த பிரதி பொலிஸ் மா அதிபரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அதேவேளை கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தற்கொலை குண்டுவெடிப்பை நடத்திய துப்பாக்கிதாரியின் மனைவி என புலனாய்வுப் பிரிவுகளால் வெளிப்படுத்தப்பட்டுள்ள சாராவின் மரணத்தை உறுதிப்படுத்த 3 சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்ட டி.என்.ஏ சோதனைகள் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.