போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் வெளிநாட்டவர்கள் இருவர் கைது
காலி - டிக்சன் வீதி பகுதியில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரே கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.
மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு வழங்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர், உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
போலி நாணயத்தாள்
குறித்த இருவரும் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பதற்காக 400 அமெரிக்க டொலர் (இலங்கை பெறுமதியில் சுமார் 128,000 ரூபா) பெறுமதியான போலி நாணயத்தாள்களை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து உடனடியாக செயற்பட்ட உனவட்டுன சுற்றுலா பொலிஸ் நிலைய அதிகாரிகள், சந்தேகநபர்கள் தங்கியிருந்த காலி டிக்சன் வீதியிலுள்ள விடுதியைச் சோதனையிட்டனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து மேலும் 5,200 போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணை
இவர்கள் 26 மற்றும் 27 வயதுடைய தஜிகிஸ்தான் நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக ஹபராதுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
போலி நாணயத்தாள் புழக்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறியமை மற்றும் வெளிநாட்டு செலாவணி சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது.
இந்த நிலையில் சந்தேகநபர்கள் இன்று (08.05.2026) காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், ஹபராதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam