கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது பெய்துவரும் கன மழையால் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, களனி ஆற்றுப்படுக்கையில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திணைக்களம், அந்தக் காலகட்டத்தில் ருவன்வெல்ல, சீதாவக்க, டொம்பே, தெஹியோவிட்ட, எஹெலியகொட, யதியந்தோட்ட மற்றும் புலத்கொகுபிட்டிய ஆகிய பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

விழிப்புடன் இருக்குமாறு
களனி ஆற்றுப்படுகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சுமார் 300 மில்லிமீட்டர் குறிப்பிடத்தக்க மழை பதிவாகியுள்ளது.
அதன்படி, களனி ஆற்றுப் படுகையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் ஆற்று நீர்மானிகளின் மழை நிலவரம் மற்றும் நீர் மட்டங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அடுத்த 24 மணி நேரத்தில் இந்த சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பயணிகள் இதுகுறித்து விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.