வெள்ள அபாய எச்சரிக்கை! முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு (DDMCU) கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு (DDMCU) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குளங்களின் தற்போதைய நிலவரம்
முத்தையங்கட்டு நீர்ப்பாசனப் பிரிவின் கீழ் மொத்தம் 10 குளங்கள் உள்ள நிலையில் அவற்றில் தற்போதைய நிலவரம் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, முத்தயங்கட்டு குளம் – பராமரிப்பு பணிகள் காரணமாக நீர்மட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
தண்ணிமுறிப்பு குளம் – வான் கதவு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதுடன், மழை நிலவரத்தைப் பொறுத்து திறப்பு மேலும் அதிகரிக்கப்படும்.
மாதவளசிங்கம் குளம், கனுக்கேணிக்குளம், உடையார்கட்டுக்குளம், விசுவமடுக்குளம், மருதமடுக்குளம் – வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன.
தட்டையார்மலை குளம் – வான்பாயும் நிலையில் உள்ளது. எதிர்பார்க்கப்படும் கனமழை காரணமாக, வான்பாயும் அளவு இன்று முதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் குளங்களின் கீழ்ப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. ️
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
குறிப்பாக கழிவாறுகளுக்கு அண்மையில் மற்றும் தாழ்வான பகுதிகளில் விவசாயம் செய்பவர்கள், இந்த காலகட்டத்தில் நெற்பயிர் நிலங்களுக்கு செல்ல வேண்டாம். தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல வேண்டியிருந்தால்: • உயரமான பாதுகாப்பான இடங்களை முன்கூட்டியே அடையாளம் காணவும்.

குறைந்தது ஒரு வாரத்திற்கான உணவுப் பொருட்களை உடன் எடுத்துச் செல்லவும். வெள்ள காலத்தில் உணவு வழங்கல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் கடினமாகும் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக நெற்பயிர் நிலங்களுக்கு செல்லாமல் இருப்பது மிகவும் அவசியம்.
குறிப்பாக தண்ணிமுறிப்பு மற்றும் நித்தகைக்குளங்களின் கீழ்ப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும்.
தற்போது அனைத்து குளங்களும் பாதுகாப்பான நிலையில் உள்ளன. நீர்ப்பாசனத் திணைக்களம் தொடர்ச்சியாக நிலவரத்தை கண்காணித்து வருகிறது.இருப்பினும், எதிர்பாராத கனமழை ஏற்பட்டால் திடீர் வெள்ள நிரம்பல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த எச்சரிக்கையை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.