எருமை மாடுகள் முட்டியதால் ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பதுளை மாவட்டத்திலுள்ள பிரதேசம் ஒன்றில் எருமை மாடுகள் முட்டியதால் பாடசாலை மாணவர்கள் ஐவர் காயமுற்று ஹல்துமுல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பதுளை மாவட்டத்திலுள்ள ஹல்துமுல்ல - பத்கொட பிரதேசத்தில் இன்று (11.07.20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
ஹல்துமுல்ல பிரதேச கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பத்கொட விபுலானந்த தமிழ் கல்லூரி மாணவர்கள் ஐவரே இவ்வாறு காயமுற்றுள்ளனர்.
குறித்த மாணவர்கள் 10 மற்றும் 11 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கவலைக்கிடமாக இல்லை
பத்கொட மன்சந்தியில் இருந்து பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது பிரதேசவாசியொருவர் மேய்த்துக்கொண்டு வந்த எருமை மாடு குழப்பமடைந்து, சிறுவர்களை துரத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹப்புத்தளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |