உழவு இயந்திரம் விபத்து: மதரசா அதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது
புதிய இணைப்பு
அம்பாறை - காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நிந்தவூர் மதரசா அதிபர் ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் இன்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நானகாம் இணைப்பு
காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி - சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதில் காணாமல் போயிருந்த 6 பாடசாலை மாணவர்களில் மேலும் ஒரு மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இரு மாணவர்களின் சடலங்கள் முன்னதாக மீட்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் மேலுமொரு மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏனைய மாணவர்களினை மீட்கும் பணியானது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மூன்றாம் இணைப்பு
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை இரண்டு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம், விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலங்கள் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திம் வெள்ள நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
அம்பாறை - மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டு சென்ற சம்பவத்தில் காணாமல் போயுள்ள ஆறு மாணவர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த ஆறு மாணவர்களை தேடும் பணிகள் இன்று (27.11.2024) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றன.
கடற்படையினருடன் இணைந்து சமுதாய தொண்டர் அமைப்புகளும் களத்தில் இணைந்து தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி - சிஹான்
முதலாம் இணைப்பு
காரைத்தீவு - மாவடிபள்ளி பகுதியில் உழவு ஒன்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதில் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.
அதில் 2 மாணவர்கள் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.
இருவர் மீட்பு
அம்பாறை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ரியாஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், காணாமல் போயுள்ளவர்களின் விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
அதேநேரம் காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - சிவா மயூரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




