இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற கடற்றொழில் அனுமதிகள் ஏனைய மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் தொழில் முறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் கடற்றொழில் அமைச்சரை சந்தித்து முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
அதாவது, உள்ளூர் இழுவைமடிப் படகுகளின் செயற்பாடுகள், சிலிண்டர் பாவனை மற்றும் கம்பி பயன்பாடு போன்றவை நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை கிளிநொச்சி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
இந்நிலையில், குருநகர் இழுவைமடித் தொழில் முறைமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னார் மாவட்டத்தில் அனுமதி வழக்கப்பட்டுள்ள சிலிண்டர் தொழில் முறை, கம்பி பயன்படுத்தல் போன்றவை மன்னார் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையூறாக இருப்பின் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-கஜிந்தன்
முதலாம் இணைப்பு
இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்ட வட்டமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்தொழிலாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் நேற்று (17.03.2023) கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் மாலை 03:30 மணியளவில் வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், மீனவர்களது பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தார்.
இதன்போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது
முதற்கட்டமாக இந்திய கடற்தொழிலாளர்களது இழுவைப் படகு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக இராஜாங்க அமைச்சர் முருகன், இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோரிடமும் இராஜ தந்திர ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என இந்திய கடல் எல்லையில் படகுகளில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தித் தான் எமது
நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டியுள்ளது.
நேரில் வந்து செய்தி
அப்போது இந்திய ஊடகவியலாளர்களும், இலங்கை ஊடகவியலாளர்களும் நேரில் வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளை அவதானித்துச் செல்லட்டும்.
அப்போது தான்
இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என கடற்தொழில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.