தமிழக கடற்றொழிலாளர்கள் நடத்திய தாக்குதல் - காயங்களுடன் யாழ். இளைஞர் மீட்பு
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரை தமிழக கடற்தொழிலாளர்கள் கடுமையாக தாக்கி தமிழகத்திற்கு கடத்தி சென்ற நிலையில், தமிழக கடலோர காவல் படையினரால் குறித்த கடற்றொழிலாளர் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் - மயிலிட்டி மற்றும் வளலாய் பகுதியை சேர்ந்த மூன்று கடற்றொழிலாளர்கள் பலாலி வடக்கில் இருந்து சுமார் 15 கடல் மைல் தூரத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில், அப்பகுதிக்கு வந்த தமிழக கடற்றொழிலாளர்கள் அவர்களுடன் முரண்பட்டு தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது, இருவர் படகுடன் தப்பி மீண்டு வந்த நிலையில், ஒருவர் மாத்திரம் தமிழக கடற்றொழிலாளர்களிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காயங்களுடன் மீட்கப்பட்ட யாழ். இளைஞர்
இதனைத் தொடர்ந்து, அவர்கள் குறித்த நபரை கடுமையாக தாக்கியதுடன், தமிழகம் நாகப்பட்டினம் பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர்.

இதனையடுத்து, கீழையூர் பொலிஸார் யாழ்ப்பாண கடற்றொழிலாளரை மீட்ட நிலையில் , தாக்குதலுக்கு இலக்காகி, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்பட்டமையால் குறித்த நபர் நாகப்பட்டினம் அரச மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆற்காட்டுத்துறைக்கு தென்கிழக்கு பகுதியாக 09 கடல்மைல் தூரத்தில் தாம் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில், பைவர் படகில் வந்த மூவர் தமது வலைகளை அறுத்து, அட்டகாசம் புரிந்ததாகவும், அவர்களை தாம் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளையில், இருவர் படகுடன் தப்பி சென்று விட்டதாகவும் தமிழக கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், படகில் வந்த ஒருவரை மாத்திரம் தாம் மடக்கி பிடித்து, நாகப்பட்டினத்திற்கு கொண்டு வந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.