தகுதி வாய்ந்த அதிகாரிகள் எழுத்து மூலமாக உறுதி தரும் வரை போராட்டம் தொடரும்: மீனவர்கள் எச்சரிக்கை(Photos)
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்தியப் படகுகளை நிரந்தரமாகத் தடுத்து
நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவைத் தகுதி வாய்ந்த அதிகாரிகள்
எழுத்து மூலமாகத் தரும் வரை தமது போராட்டம் தொடரும் என மீனவர்கள்
தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த போராட்டத்திற்குப் பல தரப்பினரும் தங்களது ஆதரவை அளித்து வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவ அமைப்புகளும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் நேரடியாகப் போராட்ட களத்துக்கு வந்து ஆதரவளித்துள்ளனர்.
அத்தோடு முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனும் முல்லைத்தில் இருந்து வருகைதந்து போராட்டத்திற்கு ஆதரவளித்திருந்தனர்.
குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்கள் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்திய இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பினால் நமது கடல் வளம் அழிக்கப்படுவதுடன், சொத்துக்களும் நாசமாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இது உயிர்களையும் பறித்து எடுத்திருக்கின்றது.
இந்நிலையில் இந்த அராஜகத்திற்கு நிரந்தர முடிவு காணும் நிலையில் மீனவ சமுதாயத்திலிருந்து பொன்னாலை தொடக்கம் பருத்தித்துறை வரை சாலைமறியல் போராட்டத்தையும் கடற்றொழில் மறிப்பு போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றோம்.
இப்போராட்டத்தைப் பாதிக்கப்பட்ட மீனவ சமுதாயம் ஒன்றிணைந்து மக்கள் போராட்டமாக முன்னெடுத்து வருகின்றது. இதற்குச் சமாசத்திற்கும் மாவட்ட சம்மேளனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
மக்களால் தொடரப்படும் இந்த போராட்டமானது மீனவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடரும். மேலும் போராட்டத்தை நடத்துவதற்குப் பொதுமக்களிடம் ஆதரவு கோரி நிற்கின்றோம்.
இப் போராட்டத்திற்கு வர்த்தக சங்கங்கள் போக்குவரத்து அமைப்புகள் பொது
அமைப்புகளின் ஆதரவு வழங்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறோம் எனத்
தெரிவித்துள்ளனர்.
இன்று காலை போராட்டக்காரர்களுடன் பேசுவதற்காக மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்
திணைக்கள அதிகாரிகள், கடற்படையினர், பொலிஸார் மற்றும் கடலோர காவல்படை
அதிகாரிகள் வருகைதந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும்
எந்தவிதமான முடிவும் எட்டப்படாததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றிருந்தமை
குறிப்பிடத்தக்கது.








