வீதியோரத்தில் மீன் வியாபாரம் செய்ய தடை:வியாபாரிகள் எதிர்ப்பு(Photos)
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட வீதியேரங்களில் இதுவரை காலமும் மீன் வியாபாரிகள் மீன் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை(27) வீதியோரத்தில் மீன் விற்பனை செய்வதை நிறுத்துமாறு பொது அறிவித்தல் ஒன்றை ஒலிபெருக்கி மூலம் விடுத்துள்ளது.
இந்நிலையில் பிரதேச சபைக்குட்பட்ட பொதுச் சந்தைகளில் காலை முதல் நண்பகல் வேளை வரையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு விட்டு, மாலை 2 மணிக்குப் பிற்பாடுதான் தாம் இதுவரையில் வீதியோரங்களில் மீன் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், பிரதேச சபையின் இந்நடவடிக்கை தமது வாழ்வாதாரத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை(29) அப்பகுதியிலுள்ள மீன் வியாபாரிகள், மீன் பெட்டிகளுடன் களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னால் எதிர்ப்பு நடவடிகையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதேச சபை உறுப்பினரின் கருத்து
பொதுச் சந்தைகளில் வியாபாரத்தில் ஈடுபடும் மீன் வியாபாரிகள் மாலை 2 மணிக்குப் பின்னர் வீதியோரங்களில் மீன் வியாபாரத்தில் ஈடுபடலாம் என்ற சபைத் தீர்மானத்தை தாம் ஏற்கனவே எடுத்துள்ளதாகவும், பிரதேச சபை அதிகாரிகளின் இந்நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என இதன்போது வருகை தந்த குறித்த பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்துள்ளார்.
எனினும் தமது மேலிடத்து அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் வீதியோரங்களில் மேற்கொள்ளப்படும் மீன் வியாபாரங்களைத் தடை செய்துள்ளதாக இதன்போது வருகை தந்து மீன் வியாபாரிகளிடம் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.அறிவழகன் தெரிவித்துள்ளார்.
பிரதேச சபையின் உறுப்பினர் மே.வினேதராஜ் கூறுகையில், நாம் 2 மணிக்குப் பின்னர் வீதியோரத்தில் வியாபாரத்தில் ஈடுபடுவதற்குரிய அனுமதி வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக பிரதேச சபையின் செயலாளர், முற்றாக வீதியோர மீன் வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றார்.ஒரு சபையிலே இரு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மீன் வியாபாரிகள் கவலை
பொதுச் சந்தையில் மீன் வியாபாரத்தில், ஈடுபடும்போது தாம் செலுத்தும் வரிகளுக்கு இதுவரையில் பற்றுச்சீட்டு வழங்குவதில்லை.
காலையில் பிடிக்கப்படும் மீன் மதியம் வரை விற்று விட முடியாது, அதனை மாலையிலும் விற்றால்தான் எமது வாழ்வாதாரம் பாதிக்காது, இல்லையேல் மற்ற நாள் மீனை வைத்திருந்தால் அவை அழுகிவிடுகின்றன.
இதனால் நாம் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்யும் மீன்களை மறுநாள் கொட்டிவிட வேண்டிய நிலை ஏற்படுகின்றது என மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கலந்துரையாடல்
குறித்த இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அபஜவிக்கிரம மீன் வியாபரிகளிடம் கலந்துரையாடியுள்ளார்.
மீன் வியாபாரிகள் அனைவரையும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு எந்த நடவடிக்கை வந்தாலும் தாம் எதிர்கொள்ளத் தயார் என கூறிவிட்டு மீன் வியாபாரிகள் மீண்டும் வீதியோரங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக தெரிவித்து அதிலிருந்து மீன்வியாபாரிகள் கலைந்து சென்றுள்ளனர்.
பின்னர் குறித்த மீன் வியாபாரிகள் செவ்வாய்கிழமை மாலை வரையும் வீதியோரங்களில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.