கிளிநொச்சியில் உழவியந்திரங்கள் மீது துப்பாக்கிச்சூடு
கிளிநொச்சி - குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் நேற்று (26.02.2026) இரவு சட்ட விரோத மணல்அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களை பிடிக்க முற்பட்ட போது உழவு இயந்திரங்கள் தப்பியோட முற்பட்ட வேளை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது உழவியந்திரத்தின் பின் சில்லு மற்றும் இயந்திரப் பகுதி ஆகியவற்றில் துப்பாக்கி ரவைகள் துளைத்துள்ளன.
இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு உழவியந்திரங்கள் விசேட அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் உழவியந்திரத்தைச் செலுத்திய சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டு சான்றுப் பொருள் மற்றும் சந்தேக நபர் ஆகியோர் மேலதிக நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி - பூநகரி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு உழவியந்திரங்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது தப்பிச் செல்ல முற்பட்ட உழவியந்திரங்கள் மீதே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஒருவர் காயம்
குறித்த சந்தர்ப்பத்தில் உழவியந்திரமொன்று தடம்புரண்டதில் விசேட அதிரடிப் படை வீரர் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |