நிதியமைச்சரின் புதிய சட்டம்! கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் திட்டம்
மாகந்துரே மதுஷ் உயிருடன் இருந்திருந்தால், அவரது கறுப்பு பணத்தையும் வெள்ளையாக மாற்றும் வாய்ப்பு அமைச்சர் பசில் ராஜபக்சவின் புதிய நிதி சட்டத்தின் மூலம் கிடைத்திருக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சராக பசில் ராஜபக்ச முதலில் நாடாளுமன்றத்தில் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் சட்டமூலத்தை முன்வைத்தார்.
கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதை சட்டமாக மாற்றவே இந்த சட்டமூலத்தை அவர் கொண்டு வந்துள்ளார்.
இலங்கையில் இப்படி மோசடியான முறையில் சம்பாதித்த பணம் அரசியல்வாதிகளிடம் மாத்திரமல்லாது, மோசடியான வர்த்தகர்கள், போதைப் பொருள் விற்பனையாளர்கள், பாலியல் தொழில் நிலையங்களை நடத்துவோரிடம் இருக்கின்றதே அன்றி, விவசாயிகளிடமோ, மீனவர்களிடமோ, சாதாரண அரச ஊழியர்கள் உட்பட பொது மக்களிடம் இல்லை.
அமைச்சர் இதனை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். மோசடியான முறையில் கொள்ளையிட்ட கறுப்பு வியாபாரிகள் சம்பாதித்த பணத்தை வெள்ளை பணமாக மாற்றவே இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்சவின் மல்வானை வீடு சம்பந்தமாக வழக்கு இல்லை என்றால், அதனையும் இந்த சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
இது வெள்ளை கடதாசியில் கொண்டு வரப்பட்டுள்ள கறுப்பு சட்டமூலம் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.