உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு எதிராக யாழில் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் தொழிற்சங்கங்கள் இணைந்து EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் அடையாள போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
குறித்த போராட்டம் நாளை ( 28.08.2023 ) நாடளாவிய ரீதியில் பல இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதை தொடர்ந்து யாழிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் யாழ். தொழிற்சங்கங்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அனுமதியின்றி பயன்படுத்த அரசாங்கம் முயல்கின்றது
பரிந்துரையின் மூலமாக ஊழியர் சேமலாப நிதி - EPF மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி - ETF நிதிகளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்குப் பயன்படுத்த அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த முனைவதன் மூலம் EPF/ETF நிதியங்களில் கணக்குகளைக் கொண்டுள்ள சுமார் 25 இலட்சம் உழைக்கும் வர்க்க அங்கத்தவர்களின் ஒரேயொரு ஓய்வூதியச் சேமிப்பினை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த அரசாங்கம் முயல்கின்றது.
பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையின்படி இந்த உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் EPF/ETF கணக்குகளின் மீது சுமத்தப்படும் போது (50% தொகை) எதிர்வரும் 16 வருட காலப்பகுதியில் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது.
நிதிகள் கிடைக்கபெறாத அபாய நிலை
இதன் தொடர்ச்சியாக அரச ஊழியரின் ஓய்வூதிய நிதியையும் இவ்வாறு கையாள அரசாங்கம் முற்படுகின்றது. இதன் மூலம் EPF/ETF அங்கத்தவர்களுக்கு நிதிரீதியான உடனடிப்பாதிப்பும் நீண்டகாலத்தில் முழுமையாக இவ்விரு நிதிகளும் கிடைக்கபெறாத அபாய நிலையும் உள்ளது.

எனவே அதற்கு அனைவரது ஆதரவினையும் வேண்டி நிற்பதோடு, மேற்படி EPF/ETF மற்றும்
ஓய்வூதிய நிதிக்கையாளல் மூலம் பாதிக்கப்படவிருக்கும் அரச, அரச மருவிய மற்றும்
தனியார் துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும்,
மக்களையும் இவ் அடையாளப் போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.