உடைக்கப்பட்ட அணைக்கட்டை நிர்மாணித்து தருமாறு கோரிக்கை
திருகோணமலை - மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ-பனிக்கிட்டியாவ பகுதியிலுள்ள அணைக்கட்டை புனரமைத்துத் தருமாறு அப்பகுதியிலுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் "வெவ் கம் புபுதுவ" திட்டத்தினால் இந்த அணைக்கட்டை புனர்நிர்மாணம் செய்வதற்காக 42 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிதாக நிர்மாணம் செய்வதற்காக ஒப்பந்தக்காரர்களினால் அணைக்கட்டு உடைக்கப்பட்டு அவ்விடத்தில் விளம்பரப் பலகை ஒன்றும் நாட்டப்பட்டுள்ளது.
ஆனாலும் கடந்த மூன்று மாதங்களாக விளம்பரப் பலகை போடப்பட்டிருந்த போதிலும் ஏற்கனவே இருந்த அணைக்கட்டு உடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் அணைக்கட்டு நிர்மாணிப்பதற்குரிய எதுவித ஏற்பாடுகளும் மேற்கொள்ளவில்லை.
மழைக்காலம் தொடங்க முன்னர் அணைக்கட்டு நிர்மாண பணிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
பனிக்கிட்டியாவ அணைக்கட்டைப் பாவித்து 150 ஏக்கர் காணிகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது இந்த அணைக்கட்டு உடைக்கப்பட்டிருப்பதால் மிக விரைவில் புனர் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்பட வேண்டி நேரிடும்.
ஆகவே கடந்த இரண்டு மாதங்களாக உடைக்கப்பட்ட அணைக்கட்டை மிக விரைவில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.