நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து 3 சடலங்கள் மீட்பு
நுவரெலியா மாவட்டம், வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விக்டன் மேற்பிரிவு தோட்டத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
42 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விறகு தேடுவதற்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலை மலைக்குச் சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில், பிரதேச மக்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே குறித்த நபர், தேயிலை மலையில் இருந்து நேற்று(23) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் திட்டமிட்ட கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வத்தளையில் மீட்கப்பட்ட சடலம்
வத்தளை – எலகந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் முல்லைத்தீவு – பாலிநகரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாலிநகரில் உள்ள விடுதியொன்றின் அறையிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த அறையில் அவர் வசித்து வந்த நிலையில் நேற்று(23) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று(24) தெரிவித்துள்ளார்.
நீதிவான் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலம் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் மீட்கப்பட்ட சடலம்
யாழ்ப்பாணம்-கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஊரெழு மேற்கு கணேசா வித்தியசாலைக்கு அருகில் இன்று(24) அதிகாலை இடம்பெற்றுள்ளது என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய சிவலோகேஸ்வரன் மதுரகன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.