பயணத்தடை விதிக்கப்பட்ட கிராமத்திலிருந்து வெளியேறிச் சென்ற குடும்பம்
வவுனியாவில் பயணத்தடை விதிக்கப்பட்ட கிராமத்தில் இருந்து வெளியேறிச் சென்ற குடும்பம் ஒன்றின் வீடு சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராச சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தாக்கம் அதிகரிப்பு காரணமாக வவுனியா, சகாயாமாதாபுரம் மற்றும் அதனையண்டிய சூசைப்பிள்ளையார் குளத்தின் ஒரு பகுதி என்பன இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் பாதுகாப்பு போடப்பட்டு முழுமையாக கிராமத்தில் இருந்து எவரும் வெளியேறிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சூசைப்பிள்ளையார்குளம், வைரவகோவிலடிப் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்று சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிஸார் ஆகியோரின் அனுமதியைப் பெறாது பயணத்தடை விதிக்கப்பட்ட கிராமத்தில் இருந்து வெளியேறி வெளியிடத்திற்கு சென்றுள்ளனர்.
இது தொடர்பில் சுகாதாரப் பிரிவினருக்கும், பொலிஸாருக்கும் கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த வீடு சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது. அத்துடன், குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.