உணவு பற்றாக்குறையால் 9,971 குடும்பங்கள் பாதிப்பு: ரூபவதி கேதீஸ்வரன் கருத்து
கிளிநொச்சி மாவட்டத்தில் 9ஆயிரத்து 971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (19.10.2022) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து குறைப்பாடு மற்றும் வறுமை 5 வயதுக்கு உட்பட்ட 576 சிறார்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 784 கர்பிணித் தாய்மார்கள் போதுமான உணவின்மையால் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
உணவு உற்பத்திகளை ஊக்கப்படுத்துதல்
பாதிப்புற்றுள்ளவர்களுக்கான தீர்வினை வழங்குகின்ற வகையில் மாவட்ட மட்ட குழுவுக்கும் சம்மந்தப்பட்ட கிராமிய குழுவுக்கும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயங்களில் இருந்து மக்களை பாதுகாக்க அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்.
அதற்கமைய குறிப்பாக வீட்டுத் தோட்டங்களை உருவாக்குதல் உணவு உற்பத்திகளை ஊக்கப்படுத்துதல் உணவு உற்பத்தியாளர்களிடமிருந்து உணவைப்பெற்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்குதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட செயலக
அதிகாரிகள்,பிரதேசசெயலாளர்கள்,சம்மந்தப்பட்ட துறை சார் அதிகாரிகள்,
உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப்
பலர் கலந்து கொண்டிருந்தனர்.



