மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த போலி சட்டத்தரணி.. அதிர்ச்சியில் மக்கள்!
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் உள்நுழைந்து வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்த ஆண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபரை நேற்று (08.11.2025) சனிக்கிழமை ஓந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பில் ஒரு வீட்டிலிருந்து திருடப்பட்ட தங்க நகைகள், பின்னர் மீட்கப்பட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
முன்நகர்வு பத்திரம்
குறித்த தங்க நகைகளை மீளப் பெறுவது தொடர்பாக மட்டக்களப்பு நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணையை வழக்காடுவதற்கு நல்ல சட்டத்தரணி ஒருவரை அவற்றின் உரிமையாளரான பெண்ணொருவர் தேடியுள்ளார்.
அவருக்கு அறிமுகமான ஒருவர், தனக்கு வழக்காடிய நல்ல சட்டத்தரணி ஒருவர் இருப்பதாக போலி சட்டதரணியின் தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பெண் அந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட நிலையில், போலி சட்டத்தரணி தான் அந்த தங்க ஆபரணங்களை மீட்டு தருவதாகவும் இதனை மிக விரைவாக மீட்பதற்கு நீதிமன்றத்தில் சிலருக்கு பணம் வழங்க வேண்டும் எனவும் கூறியதோடு வழக்கு தொகையாக எனக்கு 2 இலட்சம் ரூபாய் தருமாறும் கோரியுள்ளார்.

அதற்கு குறித்த பெண் சம்மதித்து அவருக்கு முற்பணமாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார். அடுத்து சில தினங்களின் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் வழக்கிற்கு நீதிமன்றத்துக்கு வருமாறு கடிதம் வந்துள்ளது.
இந்தநிலையில், போலி சட்டத்தரணி தான் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்ததையடுத்து, வழக்கிற்கு வருமாறு அழைப்பு கடிதம் வந்துள்ளதாக குறித்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது குறித்த பெண்ணுக்கு, நவம்பர் மாதம் திகதியிடப்பட்ட வழக்கை பணம் வழங்கி முன்கூட்டியே மாற்றியிருப்பதால் 3 தினங்களில் நீதிமன்றத்துக்கு வருமாறு அழைப்பு கிடைத்துள்ளது.
வழக்கு விசாரணை
இதனையடுத்து, அங்குள்ள சட்டத்தரணி ஒருவருடன் தொடர்பு கொண்டு தான் கொழும்பு உயர் நீதிமன்ற சட்டத்தரணி என அறிமுகப்படுத்தி எனக்கு கல்முனை மற்றும் திருகோணமலை போன்ற உயர் நீதிமன்றங்களில் வழக்கு இருப்பதாகவும் தனது வாடிக்கையாளர் ஒருவரின் வழக்கை எடுத்து நடாத்துமாறும் கோரியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த சட்டத்தரணி அந்த வாடிக்கையாளரை தன்னை சந்திக்க அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வழக்கு தொடர்பாக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் உள்ள குறித்த சட்டத்தரணியை பாதிக்கப்பட்ட பெண் சந்தித்து வழக்கு தொடர்பாக தெரிவித்ததையடுத்து, வழக்கு விசாரணைக்கு அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (06.11.2025) வழக்கு விசாரணைக்காக குறித்த பெண் மற்றும் போலி சட்டத்தரணி சென்றுள்ள நிலையில், ஏற்கனவே வழக்கிற்கு முன்னிலையாகிய சட்டத்தரணி இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து, அவரை அங்கிருந்து பதிவாளர் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று இவர் சட்டத்தரணியா என்பதை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளார்.
அதனையடுத்து, நீதிமன்ற பதிவாளர் போலி சட்டத்தரணியிடம் அடையாள அட்டையை கோரிய போது, அவர் தனது வாகனத்தில் இருக்கிறது எடுத்துக் கொண்டு வருவதாக தெரிவித்து அங்கிருந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதிக்கு சென்று தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
மேலதிக விசாரணை
இதனைத் தொடர்ந்து இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதன் பின்னர், குறித்த போலி சட்டத்தரணி நேற்று சனிக்கிழமை இரவு ஓந்தாச்சிமடத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவர், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல நீதிமன்றத்திற்குள் தனது வாகனத்துடன் உள்நுழைந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி நீதிமன்ற வளாகத்திற்குள் நடமாடி வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை மற்றும் இறப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு அடையாளப்படுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர், கறுப்பு கழுத்துப்பட்டி, கோட் சூட், வழக்குகளை கொண்ட 16 கோப்புகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் அவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam