கொழும்பில் வீடொன்றுக்குள் சிக்கிய மர்ம ரகசியம் - அதிர்ச்சியில் பொலிஸார்
கொழும்பில் போலியான முறையில் செயற்பட்டு வந்த கச்சேரி ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
பொரளை, என். எம். பெரேரா மாவத்தையிலுள்ள வீடு ஒன்றில் நீண்டகாலமாக மிகவும் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்த போலி ஆவணங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் போலி வாகன இலக்கத் தகடுகளை தயாரிக்கும் நிலையில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அங்கு, மூன்று பேர் பணம், பெருமளவிலான போலி உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் ஆவணங்களுடன் கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போலி ஆவணங்கள்
அந்த வீட்டிலிருந்து 600 போலி உத்தியோகபூர்வ முத்திரைகள், காணிப் பதிவு அலுவலகத்தின் மூலப் பத்திரக் கோப்புகள் 02, போலி தேசிய அடையாள அட்டைகள் 04, போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மின்சார உபகரணங்கள், தட்டச்சு இயந்திரங்கள், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள், 15 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்ட பல பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்த முத்திரைகளுக்குள் அரசாங்கத்தின் பிரதான திணைக்களங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகள், சமாதான நீதவான், சட்டத்தரணி மற்றும் பல்வேறு பதவிகளை வகிப்போரின் உத்தியோகபூர்வ முத்திரைகள் போலியாகத் தயாரிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் அந்த இடத்தை முற்றுகையிட்ட போது அங்கிருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் நுகேகொட, தெல்கந்த பகுதியில் வைத்து மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.