தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களுக்காக பதவியை வைத்துக்கொண்டிருப்பது வேதனையான விடயம்: இரா.சாணக்கியன்
இந்த அரசாங்கம் மக்களுக்குச் செய்யும் மோசமான செயற்பாடுகளைக் கண்டு ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களே இன்று பதவியைத் துறந்து சென்றுள்ள நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களுக்காகப் பதவியை வைத்துக்கொண்டிருப்பது வேதனையான விடயம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும்போது வேதனையான விடயமாகவிருக்கின்றது. நாடுமுழுவதும் வெடித்துள்ள போராட்டம் காரணமாக ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்ற அமர்வு ஆரம்பித்த கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் இதனை தெரிவித்து வருகின்றோம். காயம் ஒன்று இருக்கும்போது அந்த காயத்திற்கு மருந்திட்டு அதனை குணப்படுத்தாமல் அதனை மூடிமூடி வைத்து இன்று அந்த காயம் காரணமாகக் காலை வெட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே இந்த ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று எரிமலையினை சூழ பஞ்சுகள் இருப்பதுபோன்றே மக்கள் உள்ளனர். இன்று எவர் போராட்டத்திற்கு அழைத்தாலும் தயார் நிலையிலேயே மக்கள் உள்ளனர். மக்கள் எதிர்நோக்கும் கஷ்டம் காரணமாகவே இந்த நிலையேற்பட்டுள்ளது.
இந்த நாட்டின் நிலைமை மிக மோசமாகச் சென்றுகொண்டிருக்கின்றது. இன்று நடைபெறும் போராட்டங்கள் அரசியல் கட்சிகள் இணைந்து முன்னெடுக்கும் போராட்டம் அல்ல. மக்களாகவே முன்வந்து முன்னெடுக்கும் போராட்டம். இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் படும் கஷ்டங்கள் இன்று நெருப்பு மலையாகக் காணப்படுகின்றது.
இதன் காரணமாக இந்த போராட்டங்களை அரசாங்கத்தினால் கட்டப்படுத்தமுடியாத நிலை வரும். நாங்கள் பொறுப்புள்ள அரசியல் கட்சியாக இந்த பிரச்சினையை இந்த நாட்டில் எவ்வாறு தீர்க்கமுடியும் என்றே பார்க்கவேண்டும்.
இன்று இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் இந்த நிலைமை இவ்வாறு நீடிக்குமானால் மக்கள் வன்முறைகள் ஊடாக தமது கோவத்தினை வெளிப்படுத்தமுனையும்போது அதனை அடக்க அரசாங்கம் இராணுவத்தினரை பாவிக்கும் நிலையும் உருவாகலாம். இராணுவத்தின் குடும்பமும் இந்த நாட்டில் உள்ளது.
அவர்களின் குடும்பத்திலும் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கும். இன்று அரசாங்கத்தின் மீது உள்ள அதிருப்தியைக் கொண்டு ஒரு சிலர் குழப்பங்களை ஏற்படுத்த முனைகின்றனர். கலவரத்தின்போது பாதுகாப்பு பிரிவினர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பேருந்து எரிக்கப்படுகின்றது.
கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இனக்கலவரத்தின் பின்னணியில் செயற்பட்டவர் போராட்டத்திற்கான அழைப்பினை விடுத்துள்ளார். இவற்றினை பார்க்கும்போது சந்தேகத்துடனேயே பார்க்கவேண்டிய நிலையுள்ளது. தற்போதுள்ள பிரச்சினைகள் மக்களுக்கும் தெரியும். அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.
ஆனால் அரசாங்கத்திற்குத்தான் தெரியாத நிலையுள்ளது. அரசாங்கத்திற்கு மட்டும்தான் மக்கள் படும் கஷ்டம் தெரியாமல் உள்ளது. ஜனாதிபதி நாட்டின் உண்மை நிலையினை மக்களுக்கு எடுத்துச்சொல்லி இதற்கு மாற்றுவழியாக அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒரு இணக்கப்பாட்டை எட்டுவதன் மூலமே நாட்டில் உள்ள பிரச்சினையைத் தீர்க்கமுடியும்.
விரைவில் ஒரு தேர்தல் நடாத்தக்கூடிய சூழ்நிலையில்லாத காரணத்தினால் இந்த நிலைமையினை தொடர இடமளிக்கக்கூடாது. இன்றைய நாட்டில் சூழ்நிலையினால் 30வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் இன்றும் வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் அடக்குமுறைகளுக்குள்ளாகப்படுகின்றனர்.
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தின்போது பொலிஸ் அதிகாரியொருவர் தாய் ஒருவர் மீது நடாத்திய தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு எனது ஆதரவு என்றும் இருக்கும். போராட்டம் ஒத்திவைக்கப்பட்டாலும் அந்த போராட்டம் நடைபெறும்போது நாங்கள் ஆதரவு வழங்குவோம். நாங்கள் ஜனாதிபதியைச் சந்தித்த வேளையில் போது கூட இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தினோம்.
வடக்கு, கிழக்கில் பொருளாதார பிரச்சினைகளையும் தாண்டி பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளது. நான் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து நான் தெரிவித்த கருத்தினை கிழக்கு மாகாண ஆளுநர் பொய்யென்று கூறியுள்ளார்.
ஆனால் அதனை நான் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கத் தயாராகவிருக்கின்றேன். பொருளாதார ரீதியாகவும் இனரீதியாகவும் அடக்குமுறைகள் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இன்று எம்மவர்களின் சிலர் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக உள்ளதே இதற்குக் காரணமாகும்.
இந்த நாட்டில் உள்ள தாய்மார் எதிர்கொள்ளும் பிரச்சினைக்காக ஹிருணிக்கா பிரேமச்சந்திரன் முன்னெடுத்த போராட்டத்தினை வரவேற்கின்றேன். அந்த போராட்ட நேரத்தில் அரசாங்கத்தின் கைக்கூலியொருவர் அந்த போராட்டத்தினை குழப்புவதற்கு முயற்சிகளை முன்னெடுத்திருந்தார்.
இன்று அரசாங்கத்துடன் இருக்கும் இராஜாங்க அமைச்சர்கள், இந்த அரசாங்கம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கும் மோசமான செயற்பாடுகளைக்கண்டு தமது பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு வெளியேறிவிட்டனர். ஆனால் தமிழர்கள் ஒருசிலர் மட்டும் அபிவிருத்திக்குழு தலைவர் பதவி, இராஜாங்க அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு தங்களது சுயநலத்துக்காக அரசாங்கத்தினை ஆதரிக்கின்றது வேதனைக்குரிய விடயமாகும்.
மக்களுக்காக அரசியலுக்கு வந்த நீங்கள் ஆளும்கட்சிக்காக
அரசியலுக்கு வந்தவர்களாக இருக்கக்கூடாது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின்
பதவிகளைப் பிடித்துக்கொண்டுள்ளவர்களை மக்கள் எதிர்காலத்தில் இனங்கண்டு தெற்கில்
எவ்வாறு அரசியல்வாதிகள் துரத்தியடிக்கப்படுகின்றார்களோ அவ்வாறு இங்கும்
அவர்கள் வரும்போது துரத்தியடிக்கவேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
