பேஸ்புக்கில் இடம்பெறும் பாரிய மோசடி தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை
பல்வேறு பெயர்களில் பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களைக் கொண்ட பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு பணம் மோசடி செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
அவ்வாறு பணத்தை மோசடி செய்து வரும் குழுவை விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவு நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
பாரிய மோசடி
இந்த சந்தேக நபர்களால் பல பெயர்களில் பேஸ்புக் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய விளம்பரங்களை வெளியிடப்பட்டுள்ளது.

அதனை நம்பிய மக்களிடம் மில்லியன் கணக்கான ரூபாய்களை மோசடி செய்துள்ளதாக, குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கொழும்பு தலைமை நீதவான் அசங்கா போதரகமவிடம் தெரிவித்தனர்.
கரந்தெனய பகுதியைச் சேர்ந்த ஒருவர், புற்றுநோய் நோயாளியான தனது மகளின் புகைப்படங்கள், தகவல்கள் மற்றும் பல்வேறு வங்கிக் கணக்குகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு மோசடியாக பணம் சேகரித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணை
இது தொடர்பான அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தொடர்புடைய தகவல்கள் தெரியவந்ததாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட ஓபநாயக்க பகுதியை சேர்ந்த சமில் சந்தருவன், ரக்வானவையைச் சேர்ந்த முசான் ஷமிந்த மற்றும் ஓபநாயக்கவைச் சேர்ந்த ஹர்ஷ சதுரங்க ஆகிய மூன்று சந்தேக நபர்களையும் தலா 100,000 ரூபாய் பிணையில் விடுவிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
சமூக ஊடகங்களில் புற்றுநோய் நோயாளிகளின் விளம்பரங்களை வெளியிட்டு மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தலைமை நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.