உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு (Photos)
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 55 போரையும் தொடர்ந்தும் மே 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 21.04.2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்குப் பயிற்சிக்காகச் சென்றார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் காத்தான்குடியை சேர்ந்தவர்கள் மற்றும் சஹ்ரானின் சகோதரி, அவரின் கணவர் உட்பட 69 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் 4 வெவ்வேறு இலக்கம் கொண்ட வழக்குகளைத் தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதில் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றிலிருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன், 5 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
7 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து ஏனைய 55 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அநுராதபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பலத்த பாதுகாப்புடன் நீண்ட காலத்திற்குப் பின்னர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்ட நிலையில், 55 பேரும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.





