மகிந்தவை நாம் இலக்கு வைக்கவில்லை! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். புதிய அரசமைப்பில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்ட பின்னர் இதற்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலம் மகிந்த ராஜபக்சவை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்டதல்ல. அது ஓய்வுபெற்ற அனைத்து ஜனாதிபதிகளுக்குப் பொதுவானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை
கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அரசமைப்பு திருத்தத்தின் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு மக்கள் எமக்கு ஆணையை வழங்கியிருக்கின்றனர்.
எனினும், புதிய அரசமைப்புக்கான நடவடிக்கைகளை நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதற்குச் சற்று காலம் எடுத்துக்கொள்வதில் பிரச்சினையில்லை என்று நினைக்கின்றோம்.
ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருட காலம் மாத்திரமே கடந்துள்ளது. அரசு பதவியேற்று பத்து மாதங்களே ஆகின்றன. எனினும், நாட்டின் அபிவிருத்திக்கான பல்வேறு அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் முதலில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே எமது இலக்காகும். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
இவற்றுக்கிடையில் ஊழல், மோசடிகளுக்கு எதிரான சுற்றிவளைப்புக்களிலும் அரசு ஈடுபட்டு வருகின்றது. சர்வதேசத்தின் நம்பிக்கையையும் பெற்று வருகின்றோம். இவற்றுக்கு மத்தியில் புதிய அரசமைப்புக்கான நடவடிக்கைகளையும் விரைவில் ஆரம்பிப்போம்.
அதன் அடிப்படையிலேயே தற்போது முன்னாள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளால் திறைசேரிக்கு ஏற்படும் சுமை, அதனால் அதிகரிக்கும் மறைமுக வரி என்பவற்றால் தான் மக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். எனவேதான் அதனை நீக்குவதற்கான சட்டமூலத்தைச் சமர்ப்பித்துள்ளோம்.
இதற்கு எதிராக ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்ற போதிலும், அதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சகல உறுப்பினர்களும் இதற்கு ஆதரவான வாக்களிப்பர் என்று நம்புகின்றோம்.
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளுக்காக திறைசேரி பெரும் சுமையை சுமக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் எண்ண வேண்டிய தேவை அவற்றுக்கு இல்லை என்று நினைக்கின்றோம். வாக்களிப்பின் போது இது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும்.
இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மாத்திரம் இலக்கு வைத்து அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட மூலமல்ல. சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் சகல முன்னாள் ஜனாதிபதிகளும் அதற்கமைய செயற்படுவர் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
