ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அரசியலில் இருந்து அகற்ற முயற்சி! கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு
வடக்கு - கிழக்கில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை அரசியல் அரங்கில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழரசு கட்சியினர் செயற்படுகின்றனர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபாவின் 35ஆவது தியாகிகள் தின நினைவேந்தல் மு.கி.மாகாண உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், "உண்மையில் 35 ஆவது நினைவேந்தல் என்பது இன்றுடன் முடிந்து போவது அல்ல காலம் காலமாக இப்படியான நினைவுகள் நினைவு கூரப்படவேண்டிய ஒரு தேவை கட்டாயம் எங்களுக்கு இருக்கின்றது.
இந்த நாட்டில் அடிமைகளாக இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம் தமிழினத்தின் உரிமைகளை பெறுவதற்காக அகிம்சை ரீதியாக ஆயுத ரீதியாக போராடிய எங்களுடைய இனம் 7 சதாப்தங்களுக்கு மேலாக இன்றுவரை போராடிக் கொண்டு இருக்கின்றனர்.
போராட்ட இயக்கங்கள்
1983ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய இன அழிப்பை தொடர்ந்து விடுதலை போரட்ட இயக்கங்கள் வீறு கொண்டு எழுந்தன. அந்த வகையில் 5 போராட்ட இயக்கங்கள் முன்னணியில் இலங்கை பேரினவாதத்திற்கும் பாதுகாப்பு படைகளுக்கும் எதிராக போரிட்டார்கள் அந்த காலகட்டத்தில் தான் இலங்கை அரசு 5 இயக்கங்களுடன் திம்பு பேச்சுவார்த்தை நடந்தது.
அதில் எதுவும் நடைபெறவில்லை போராட்டம் தொடர்ந்தது தனித்தனியாக இந்த போராட்ட இயக்கங்கள் போராடினால் எங்களுடைய இலக்கை அடைய முடியாது என்ற காரணத்தினால் ஈழ தேசிய முன்னணி என்ற ஒரு கூட்டமைப்பு தோழர் பத்மநாபா உருவாகினார் அதில் சிறிசபாரட்ணம், தோழர் பாலகுமார், என மூன்று இயக்கங்களும் ஒரே அணியாக செயற்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகள் அதில் இணைந்து கொண்டனர். துரதிஸ்டவசமாக இந்த போராட்ட இயக்கங்களுக்குள் 1986 ம் ஆண்டு முறுகள் ஏற்பட்டது
இதனையடுத்து விடுதலைப் பாதை வேறுதிசை திரும்பபட்டது இயக்கங்களுக்குள் மோதல் இயக்கங்களுக்கும் இலங்கை பாதுகாப்புபடையினருக்கும்மிடையே மோதல்.
இவ்வாறான ஒரு சூழலிலே போராட்டகளத்தில் ஒரே இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தாலும் அரசியல் ரீதியாக எங்களுக்குள் ஒற்றுமை வரவேண்டும் என கடந்தகால கசப்பான சம்பங்களை மறந்து எமது மக்களது உரிமைக்காக ஒன்றாக செயற்பட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி 2001 ஆண்டு விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது உருவாகியது.
2009 ம் ஆண்டுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் எந்த விதமான முரண்பாடுகளும் இல்லாமல் இருந்தது இந்த ஆயுத போராட்டம் மௌனிப்பட்டதன் பின்பு அரசியல் ரீதியாக போராடிய கட்சிகளுக்குள் மிதவா கட்சிகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டு ஒரு திக்கு திசை தெரியாத நிலையிலே கட்சிகளும் மக்களும் இருந்து கொண்டிருக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
