முல்லைத்தீவில் நடைபெற்ற நிகழ்வு : ஈழத்தின் வரலாற்றை ஆவணமாக்க துணை நிற்குமா..!
முல்லைத்தீவு விசுவமடுவில் இனிய நந்தவனம் வடமாகாண சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் இனிய நந்தவனம் இதழின் வடமாகாண சிறப்பிதழாக இது அமைந்திருக்கிறது.
தமிழகத்தின் இலக்கிய படைப்பாளர்களோடு ஈழத்து இலக்கிய படைப்பாளர்களை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாக இது இருக்கும் என ஈழ இலக்கியவாதிகள் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
இலங்கையின் ஊடகத்துறையினர் மற்றும் இலக்கியவாதிகளின் பங்கேற்புடன் இந்த இதழ் வெளியீடு அமைந்திருக்கிறது.
வெளியீட்டு நிகழ்வு
விசுவமடுவில் உள்ள மத்திய சனசமூக நிலையத்தின் கேட்போர் கூடத்தில் 11.08.2024 அன்று மாலை 02.30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்விற்கு சி.நகேந்திரராசா தலைமையேற்று இருந்தார்.
இனிய நந்தவனம் வடமாகாண சிறப்பிதழினை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் வெளியிட்டு வைக்க, புத்தளம் அறிவிருட்சம் துரித கல்வி சமூக மேம்பாடு நிறுவன தலைவர் ஐ.எம் சுரைஸ் முதற்பிரதியினை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களும் பங்கேற்பாளர்களும் இனிய நந்தவனம் வடமாகாண சிறப்பிதழின் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
மதிப்பளிப்புக்கள்
வடமாகாண சிறப்பிதழ் வெளியீட்டுப் பணிகளை ஒழுங்கமைத்த யோ.புரட்சி, வன்னி மகள் எஸ்.கே.சஞ்சிகா, ரயயூலா திருச்செல்வன், சி.நாகேந்திரராசா, திரியாயூரான், சிலைவேந்தன், சந்திரகுமார் கண்ணன், யாழ் பாவாணன் ஆகியோருக்கு இனிய நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் நினைவுச் சின்னங்கள் வழங்கி மதிப்பளித்தார்.
வன்னியின் போர்க்கால மருத்துவர் வட்டக்கச்சி ஜெயராஜாவுக்கும், சிறுவர் நூல்களை அதிகம் ஆக்கிய புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி ஆசிரியர் முல்லை றிசானா ஆகியோருக்கும் நிகழ்வில் மதிப்பளிப்பளிக்கப்பட்டது.
பயனுடைய முயற்சி
தமிழ்நாட்டில் கடந்த 25 வருடமாக வெளிவந்தது கொண்டிருக்கும் இனிய நந்தவனம் இதழின் வடமாகாண சிறப்பிதழ் வெளியீடு தொடர்ந்து வடமாகாண மக்களுக்கு கிடைக்கும் எனின் அது வடமாகாண இலக்கிய படைப்பாளர்களிடையே மொழி வளர்ச்சியை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றும்.
இந்திய சஞ்சிகைகளில் எழுதக் கிடைக்கும் வாய்ப்பு ஈழத்தின் நிகழ்வுகளை ஈழ மக்களின் வாழ்வியலை தமிழக மக்களிடையேயும் கொண்டு செல்ல உதவும் என இந்திய சஞ்சிகைகளில் எழுதி வந்திருந்த ஈழ எழுத்தாளர் குமுழமருதன் எடுத்தியம்பியதை இங்கு சுட்டிக்காட்டலாம்.
ஆனையை அடக்கிய அரியாதையின் சரித்திரத்தினை மதயானையை அடக்கிய மாதரசி என்ற நாடகமாக அம்புலிமாமா என்ற இந்திய சஞ்சிகையில் எழுதியிருந்ததையும் அவர் நினைவுபடுத்தியிருந்தார். எழுத்தாவணமாக ஈழத்தமிழர்கள் தாங்கள் எதிர் கொண்டிருந்த எதிர் கொள்ளும் இன்னல்களைப் பதிவு செய்து கொள்வதற்காக இத்தகைய இதழ்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதுவே எதிர்கால சந்ததியின் வரலாற்றுத் தேடலுக்கான தகவல் களஞ்சியமாக அமையும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |