அச்சுறுத்தும் ரஷ்யாவின் திட்டம்!திடீரென ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்
ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கான அனைத்து விமானங்களையும் மார்ச் மாதம் முதல் Wizz Air ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அடுத்த இலக்கு மால்டோவா என தகவல்கள் கசிந்துள்ள நிலையிலேயே Wizz Air நிறுவனம் குறித்த முடிவை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், Wizz Air விமான சேவை நிறுவனத்தின் இந்த முடிவு தங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாக மால்டோவா உள்கட்டமைப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
விமான சேவை ரத்து
இந்த விவகாரம் தொடர்பில் Wizz Air நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், சமீபத்திய அரசியல் நகர்வுகளை கூர்ந்து கவனிக்கையில், Wizz Air நிறுவனம் மால்டோவாவுக்காக தனது அனைத்து விமான சேவைகளையும் மார்ச் 14 முதல் இடைநிறுத்துவதற்கான கடினமான ஆனால் பொறுப்பான முடிவை எடுத்துள்ளது.
Wizz Air விமான சேவை நிறுவனமானது மால்டோவாவுக்கான சேவையை பிரித்தானியாவின் Luton விமான நிலையத்தில் இருந்தே முன்னெடுக்கிறது.
ஐரோப்பா ஆதரவு மால்டோவா அரசை கவிழ்க்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக மால்டோவா ஜனாதிபதி மியா சாந்து குற்றஞ்சாட்டியுள்ள நிலையிலேயே Wizz Air விமான சேவை நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹங்கேரிய விமான சேவை நிறுவனமான Wizz Air பிரித்தானியாவில் இருந்து மால்டோவாவிற்கு செல்லும் விமானங்களை மொத்தமாக ரத்து செய்வதாக முதன்முதலில் அறிவித்துள்ளது.
மால்டோவா மீது புடினின் திட்டம்
மால்டோவா நாடானது அதன் எல்லையை வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் உக்ரைனுடன் பகிர்ந்துள்ளது.
மேலும், மால்டோவா நாட்டில் அரசியல் கலவரங்களை ஏற்படுத்த ரஷ்யா, மாண்டினீக்ரோ, பெலாரஸ் மற்றும் செர்பியா நாட்டவர்களை களமிறக்கவும் விளாடிமிர் புடின் நிர்வாகம் திட்டமிடுவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
2.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மால்டோவா நாடானது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதைத் தவிர்த்தே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.