கூட்டமைப்பினரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய குழு
இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் வைத்து இன்றைய தினம் மாலை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.
இலங்கையில் தமிழர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் சமகால அரசியல் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டது.
மேலும், தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்கும், குடிப்பரம்பலை மாற்றியமைக்கவும் அரசாங்கங்கள் அனைத்தும் செயற்பட்டாலும், இந்த அரசாங்கம் அதில் மிக வேகமாக செயற்பட்டு வருகிறது. தொல்லியல் திணைக்களத்தின் மூலம் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது.
திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்தினால் காணிகளை இழந்த மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். மட்டக்களப்பு மேய்ச்சல் தரவை தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டுள்ளது. அதை நம்பி வாழ்ந்த பண்ணையாளர்கள் கைவிடப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டுமென நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். இப்போது ஐரோப்பிய ஒன்றியமும் கேட்கிறது. எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாட்டாக வைத்து அதை நீடிக்க அரசு முயல்கிறது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் நடந்த சம்பவம், நடப்பு சூழலை தெளிவாக பிரதிபலிக்கிறது. தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். பல தசாப்தங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கல் நிர்வாக அதிகாரிகளாக சிங்களவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அனைத்து வழிகளிலும் சிங்கள மயமாக்கல் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பான எந்தவொரு பேச்சுக்கும் அரசு தயாராக இல்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகையை பெறுவதற்கான தரநிலைகள் பலதை இலங்கை பூர்த்தி செய்யவில்லை.
இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை வழங்குவதெனில், அந்த தரநிலை முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். இலங்கையின் தரநிலை மேம்படாத நிலையில், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை வழங்கக்கூடாதென ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதை நீங்கள் மிக தீவிரமாக கணக்கிலெடுக்க வேண்டும்.
இந்த தரநிலைகளை இலங்கை பூர்த்தி செய்யாமல், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்கப்பட்டால், அது சிறுபான்மையினரை ஒடுக்கும் அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தாது என கூட்டமைப்பினரால் நீண்ட விளக்கமளிக்கப்பட்டது.
இந்த விவகாரங்களில் குறுகிய கால தீர்வு எதையாவது யோசிக்கலாமா என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேட்ட போதும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதை ஏற்கவில்லை. நீடித்த, நிலையான தீர்வே தமிழ் தரப்பினால் ஆராயப்படும், அதுவே தேவையானது என தெரிவித்தனர்.
இந்த விவகாரங்களில் தமக்கும் வரையறைகள் உள்ளன. நாளை அரசாங்கத்துடன் நடக்கும் மீளாய்வு கூட்டத்தில் இந்த விவகாரங்களை ஆராய்வதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, வடக்கு கிழக்கில் நடக்கும் காணி அபகரிப்பு, சிங்கள மயமாக்கல், தொல்லியல் திணைக்களம் ஊடாக ஆக்கிரமிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெளிவான தகவல்களையும், ஆவணங்களையும் பெற்றிருந்தனர்.
கூட்டமைப்பினருடனான சந்திப்பில், கூட்டமைப்பினர் இந்த விவகாரங்களை விளக்கிய போது, அவை தொடர்பான ஆவணங்களுடன் தமக்கு தெளிவான தகவல்கள் கிடைத்துள்ளதை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வெளிப்படுத்தினர்.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமையும் கட்சியின் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதில் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் பங்குபற்றினார்.
முஸ்லிம் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டது.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri