இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள மாற்றம்! மார்தட்டிக்கொள்ளும் எரங்க குணசேகர
இலங்கை வரலாற்றில் முதன்முறையாகச் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பர்கர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் இதயங்களையும் ஒன்றிணைத்து ஒரு இலங்கை அரசாங்கத்தைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புப் பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதனைச் சாதிக்க முடிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் தலையும், சஜித்தின் உடலும், நாமலின் வாலும் சேர்ந்து ஒரு புதிய விசித்திரப் பிராணியை உருவாக்க முயல்கிறார்கள். இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (26.07.2026) 2026ஆம் ஆண்டின் சகோதரத்துவ நாளை முன்னிட்டு "இதயங்களின் பிணைப்பு, ஒன்றிணைந்த பயணம்" எனும் கருப்பொருளிலான நிகழ்வு தொடர்பில் அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஒன்றிணைந்து வாழும் தேசம்
மேலும் கூறுகையில், நமது நாடு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பர்கர்கள், மலாய்க்காரர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து வாழும் ஒரு தேசமாகும். ஆனால், கடந்த பல தசாப்தங்களாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தேசமாக முன்னேறுவதற்கு தடையாகச் சில காரணிகள் இருந்தன.
சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே ஆட்சியில் இருந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் மக்களைப் பிரித்து வைத்தே ஆட்சி செய்தனர். சிங்கள மக்களின் பிரச்சினைகள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் என தனித்தனியாகக் கையாண்டு, நம்மை ஒன்றிணைப்பதற்குப் பதிலாகப் பிரித்து ஆண்டனர். இதன் இறுதி விளைவாகவே நாடு பொருளாதார ரீதியாகப் பேரழிவைச் சந்தித்தது.
ஆனால், இலங்கை வரலாற்றில் முதன்முறையாகச் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பர்கர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் இதயங்களையும் ஒன்றிணைத்து ஒரு இலங்கை அரசாங்கத்தைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதனைச் சாதிக்க முடிந்துள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இனவாதப் பிரச்சினைகள் ஏதுமின்றி அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படும் ஒரு காலம் உருவாகியுள்ளது என்பதை மிகவும் பணிவுடனும் மகிழ்ச்சியுடனும் அறியத்தருகிறேன். சகோதரத்துவ நாள் என்பது என்ன? 1983 கருப்பு ஜூலை நிகழ்ந்து இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்தப் பழைய கசப்பான நிகழ்வுகளையும் வேதனைகளையும் மீண்டும் தோண்டித் துருவுவதற்காக நாம் இங்கு வரவில்லை.
மாறாக, ஒரு தேசமாக நாம் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, மீண்டும் அத்தகையதொரு நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கே 2008ஆம் ஆண்டிலிருந்து இந்தச் சகோதரத்துவ நாளை நாம் நினைவு கூர்ந்து வருகிறோம். கருப்பு ஜூலைக்குப் பிறகு ஏற்பட்ட அந்த கறைபடிந்த வரலாற்றுக்கு மாற்றாக, அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்த சகோதரத்துவ நாளாக மாற்ற வேண்டும் என்பதே எமது இலக்காகும். 83 கருப்பு ஜூலை என்பது ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல.
அது அரசியல் ரீதியாகத் திட்டமிடப்பட்ட ஒரு சதி. உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அரசியல் லாபத்திற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொடூர நிகழ்வே ஆகும். 1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். 1981 இல் மாவட்ட வளர்ச்சிச் சபை தேர்தல் நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக ஐந்தில் நான்கு பெரும்பான்மை பெற்றும் யாழ்ப்பாண மக்களின் மனங்களை ஜே.ஆரினால் வெல்ல முடியாமல் போனது.
தேர்தல் முறைகேடுகள் மற்றும் வன்முறைகள்
அதனாலேயே, 81 தேர்தலில் வரலாற்றிலேயே முதன்முறையாக அரச அனுசரணையுடன் தேர்தல் முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே 1983 ஜூலை 23 அன்று 13 இராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்தப் படுகொலையைச் சிங்கள இனவாதத்தைத் தூண்டுவதற்காக ஜே.ஆர். அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டது. கொழும்பு பொரளைக்கு உடல்களைக் கொண்டுவந்து கலவரத்தை உருவாக்கத் திட்டமிட்டனர்.
அதன் விளைவாகக் கொழும்பு மற்றும் நாடு முழுவதும் வன்முறை பரவியது. வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அடையாளங் காணப்பட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 43 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகச் நாட்டில் 30 ஆண்டுகாலப் போர் உருவானது. அந்தப் போரின் முடிவில் நமக்கு எஞ்சியது உடைந்த கட்டடங்களும், பெற்றோரையும் கணவர்களையும் இழந்த அனாதைகளுமே ஆகும்.
அரசியல்வாதிகள் மட்டுமே அதில் லாபமடைந்தனர். 30 ஆண்டுகாலப் போருக்குப் பிறகும் ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. சிங்கள - தமிழ் மோதலுக்குப் பிறகு, சிங்கள - முஸ்லிம் மோதலை உருவாக்க முயன்றனர். கடந்த 15 ஆண்டுகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பல நெருக்கடிகள் அளிக்கப்பட்டன. ஆனால் இன்று, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சகோதரத்துவமிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப உறுதிபூண்டுள்ளோம். எமது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், இளைஞர்கள், விவசாயிகள், பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
மட்டக்களப்பு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்காகச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். கடந்த காலங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பல காணிகளை விடுவித்து, விவசாயத்திற்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் வழங்கி வருகிறோம். நாம் ஆட்சியமைத்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். எமது ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட இடமளிக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பாகச் சட்டப்பூர்வ விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும் நடுநிலையான விசாரணைகள் நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுகின்றன. தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக அதிக அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊழல்வாதிகளும் குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை எண்ணிப் பயந்தே அவர்கள் ஒன்றிணையப் பார்க்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.


சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri