மகாவலி திட்டத்திற்கு எதிராக தமிழ் தரப்புகள் ஓரணியில் நிற்க வேண்டும்! அங்கஜன் கோரிக்கை
முல்லைத்தீவில் தமிழர் பகுதிகளை மகாவலி (L)வலயம் என்ற போர்வையில் குடிப்பரம்பலை மாற்ற முயற்சிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழ் கட்சிகள் ஒரு அணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர் பகுதிகள்
அவர் மேலும் கூறுகையில், “மகாவலி வலயம் என்ற போர்வையில் தமிழர் பகுதிகளில் இனப் பரம்பலை மாற்றுவதற்கு ஏற்கனவே திரை மறைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் செயற்பாடுகள் வேகமாக இடம்பெற்று வருகிறன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கு குழாய், கொக்குத் தொடுவாய், நாயாறு போன்ற பகுதிகளை மகாவலி அமைச்சின் கீழ் ( L) வலயமாகப் பிரகடனப்படுத்தி குடியேற்றங்களை விரிவுபடுத்தும் திட்டங்கள் இடம் பெறவுள்ளன.
விகிதாசாரத்தில் மாற்றம்
இத்திட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் இன விகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படவுள்ள நிலையில் தமிழ் மக்களின் நாடாளுமன்றம், பிரதேச சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதித்துவங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறித்த திட்டம் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் துறை சார்ந்த அமைச்சருக்கு தெளிவுபடுத்தவுள்ளேன்.
ஆகவே குறித்த திட்டத்தின் பாதகத் தன்மைகளை உணர்ந்து தமிழ் கட்சிகள் ஓரணியில்
குரல் கொடுப்பது காலத்தின் தேவையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.